புதுதில்லி, ஆக.10-
தேர்தல் மின்னணு வாக்கு எந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் எழுப்பப்பட்டிருப்பதன் காரணமாக, தேர்தல் நடைமுறையை மீளவும் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்து வாக்குப்பெட்டிகளில் போடும் முறைக்குத் திரும்பிட வேண்டும் என்று மின்னணு வாக்குஎந்திரத்திற்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி, பேரணி/ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மின்னணு வாக்குஎந்திரத்திற்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று புதுதில்லி மண்டி ஹவுசிலிருந்து, நாடாளுமன்ற வீதி நோக்கி பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரணியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியவர்கள் அனைவரும் மின்னணு வாக்கு எந்திரங்கள் எப்படி யெல்லாம் தில்லுமுல்லு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் இதற்கெதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், குடிமக்களும் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது 373 தொகுதிகளில் சுமார் 56 லட்சம் வாக்குகள் தொடர்பாக, மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கும் இடையே பொருந்தாமை இருந்ததைப் பேசியவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இவ்வாறு முரண்பாடு ஏற்பட்டதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் ஏன் விளக்கிடவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் பல மின்னணு வாக்கு எந்திரங்கள் கார்களிலும் பல்வேறு கடைகளிலும் வைக்கப்பட்டிருந்ததையும் அவ்வாறு வைக்கப்பட்டிருந்தவை சமூகவலைத்தளங்களில் வெளியானதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
(ந.நி.)