tamilnadu

img

பட்ஜெட்டில் வரலாறு பண்பாடு மீது தாக்குதல்

சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மாற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சிப்பதாக ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
2020-21ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது சிந்து நாகரீகத்திற்கு பதில் சரஸ்வதி சிந்து நாகரீகம் என்று பெயர் சூட்டி அழைத்தார். இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது. 
“மண் பறித்து உண்ணேல்”
நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார். சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார். 
வேத பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொறுத்த தொடர்ந்து இந்துத்துவாவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக நிதியமைச்சரின் குரல் அவையில் எதிரொலிக்கிறது.
நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால் வேதத்தில் செங்கல்லையும் பானையையும் செய்பவர்களை அசுரர்கள் என்று வசைபாடப்படுகிறார்கள். பின் எப்படி உங்களை நாகரிகவாதி என்று உரிமைகொண்டாடுகிறீர்கள்? உங்களுக்கும் சிந்துவெளிப்பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்கல்லையும் பயன்படுத்தி ஹோமம் செய்து, பின்னர் கலைத்துவிட்டுப் போகிற பழக்கத்தை தான் வேத காலத்தில் பார்க்க முடிகிறது. சடங்குகள் பற்றிய வேத இலக்கிய குறிப்பில் சதபத பிராமணத்தில் அக்னிசேனா என்ற சடங்கிற்க்குத்தான் முதன் முதலில் செங்கல்லைப்பற்றிய குறிப்பே வருகிறது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்டசெங்கல் பயன்பாட்டினை பார்க்க முடியும். எனவே இதுவரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினை புராணங்களோடு இணைத்து உங்களின் கதைகளை தேசத்தின் வரலாறாக மாற்ற நினைக்காதீர்கள். நீங்கள் அறிவித்துள்ள ஆதிச்சநல்லூருக்கான தொல்லியல் திட்டத்தையும் இந்தப் பின்னணியை விலக்கிவிட்டு பார்க்கமுடியவில்லை. ஒளவை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல்” என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடந்தான் மண்.  அதனை ஒரு போதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது. என்று கடுமையாக சாடி உள்ளார்.
 

;