tamilnadu

img

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் கலைஞர் வெ.நா.திருமூர்த்தி - எஸ்.ஏ.பெருமாள்

கம்யூனிஸ்ட் இயக்கமும் - கலை இலக்கிய உலகமும் - 5

காலில் சலங்கை கட்டி கையில் சப்ளாக் கட்டையுடன் மேலாடையின்றி தெருவிலே நின்று தனியாளாய் தாளம் போட்டு ஆடிபாடி, கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். சமூகத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை கடுமையாக எதிர்த்து பாடியவர். தீண்டாமையை தர்மநெறி என்று கூறிய பூரி சங்கராச்சார்யாரை சிறையில் தள்ள வேண்டுமென்று பாடியவர்.  தோழர் திருமூர்த்தி 1904ஆம் ஆண்டில் ஈரோடு அருகில் வெள்ளோட்டம் பரப்பு என்ற கிராமத்தில் நாராயண நாயுடு, வெங்கடம்மா தம்பதியின் மகனாய் பிறந்தார். நான்காம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆடு மேய்த்து, கடை ஊழியர், லாடம் கட்டும் தொழிலாளி, நெசவாளி என்று வறுமையில் வாடியவர். 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தில் கலந்து கொண்டு உறையூரில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். தனது சுயமுயற்சியில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை பயின்றவர். தமிழில் ஆழ்ந்த புலமை உடையவர். அவராகவே தெருவில் நின்று ஆடிப், பாடி கூட்டம் சேர்த்து தனியாளாகப் நின்று பிரச்சாரம் செய்வார். 

தலித் மக்கள் வறுமையில் வாடுவதைப் பார்த்து  “மாடி வீடு உங்களுக்கு- சிறு  மட்ட குடிசை எங்களுக்கு காடு தோட்டம் உங்களுக்கு - கொஞ்சம் மேடும் தரிசும் எங்களுக்கு பாலும் பழமும் உங்களுக்கு - நஞ்ச பழைய சோறும் எங்களுக்கு பட்டும் பணமும் உங்களுக்கு- தினம் பழைய கந்தல் எங்களுக்கு  உடமையெல்லாம் உங்களுக்கு- இங்கு உழைப்பும் மட்டும் எங்களுக்கு உலகமெல்லாம் உங்களுக்கு - இங்கு ஒன்றுமில்லை எங்களுக்கு”  - என்று அவர் பாடும் போது கேட்போர் மத்தியில் ஆத்திரம் கொப்பளிக்கும்.  கிராமங்களில் விவசாயிகள் படும் துயரங்கள் கடனிலும் வட்டியிலும் சிக்கி நிலம், வீடு, வாசலை விட்டுவிட்டு நகரங்களுக்குப் போய் கூலிக்காரர்களாய் குடியேறுகிறார்கள். ஒண்டுவதற்கு ஓர் ஓலைக் குடிசை கூட இல்லாத ஏழை மக்களைப்பற்றி -

“நண்டுக்குச் சொந்தமா பொந்து இருக்குது நரிக்குச் சொந்தமாய் புதர் இருக்குது பாம்புக்கும் ஒரு புத்து இருக்குது பாம்புக்கும் ஒரு பொந்திருக்குது பறவைகளுக்கும் கூடு இருக்குது மனிதவர்க்கத்தில் எத்தனை பேர்கள் வாழ்க்கை நடத்திட இடமில்லாமல் மரத்தடியிலும் தெருத்திண்ணையிலும் மழையில் குளிரில் பிள்ளை குட்டியுடன் வாழ்க்கை நடத்துறார் அடிமை வாழ்வில் அவதிப்படுவதோ  அதிகார வர்க்கம் - இங்கு அடக்கியாள இனியும் விடுவதோ” - என்று பாடுகிறார். அவர் குதித்து ஆடியபடி இந்த பாடலைப் பாடும் போது கூட்டமும் சேர்ந்து ஆடும். 

அவர் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். தமிழ் கவிதாமரபில் வீரியமிக்க இசைக் கவிதைகளை எழுதினார். ஆனால் அவை எளிய மக்களுக்காக எளிய முறையில் பாடியவை. உதாரணமாக,  “மண்ணுக்காய் பாரதத்தின் சண்டையென்றும் பெண்ணுக்காய் ராமாயணச் சண்டையென்றும் பேர்போன பழங்கதைகள்  பலர் சொல்லக் கேட்டிருப்பீர்- இப்போ கண்ணுக்கு முன்னாடி நம்ம வீட்டில்  கஞ்சிக்கும் ஒருமுழக் கந்தைக்கும்  பெரிய சண்டை” இன்றைய அரசுகள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் சாதி, மத, இன, முரண்பாடுகளை வளர்த்து குளிர்காய்கின்றனர். ஆட்சியாளர்களால் நாட்டின் செல்வம் சூறையாடப்படுகிறது. லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் இதை சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

“உலகம் போற போக்கிலே ஒன்னும் நமக்கு புரியலே
உண்மை,நீதி, தர்மம் எங்கே ஒழிஞ்சு போச்சோ தெரியலே
அடுக்கடுக்காய் பிரச்சனைகள் அட்டாலி மேல் தூங்குது
ஆரு வந்தும் தீரலையின்னு ஏழை மனசு ஏங்குது”

“உலகம் போற போக்கிலே ஒன்னும் நமக்கு புரியலே உண்மை,நீதி, தர்மம் எங்கே ஒழிஞ்சு போச்சோ தெரியலே அடுக்கடுக்காய் பிரச்சனைகள் அட்டாலி மேல் தூங்குது ஆரு வந்தும் தீரலையின்னு ஏழை மனசு ஏங்குது”

“உழைப்பாளர் உலகை ஆளவே  உரிமைகள் யாவும் மீளவே  தொழிலாளர் ஆட்சி ஓங்கவே சுரண்டல் முற்றிலும் நீங்கவே எழுவீர் இடது சாரிகளே இன்ப உலகை உண்டாக்குவோம் இடரே புரியும் கொடியோர் செயலை அழியோடு ஒழிப்போம் அனுமதியோம்” - என்று முடிக்கிறார். 

ஏழை, பணக்காரன் என்ற பிரிவினை கிராமங்களிலும், நகரங்களிலும், அவர்களது குடியிருப்புகளிலே தெரிந்து விடுகிறது. மாடமாளிகைகள் ஒருபுறம், கூரைக் குடிசைகள் மறுபுறமுமாய் வாழ்க்கை முரண்பட்டு கிடக்கிறது. அதை ஆழ்ந்த புலமையோடு பாடுகிறார், “விண் முட்டும் மாளிகை மெல்லியர் கேளிக்கை பொன்வைரம் மேனியில் நிழலாடும்; கண்கொள்ளாப் பகட்டுகள் களிப்பூட்டும் லீலைகள் காசுள்ளோர்அருகினில் விளையாடும்; கோட்டான்கள் கூவலும் கொல்பசித் தேம்பலும் மூட்டாத அடுப்போரம் அலைபாயும்; வாட்டிடும் துன்பங்கள் வறுமையின் சின்னங்கள் பாட்டாளி வாழ்வோடு உறவாடும்” 

- இப்படி கவிதை அழகோடு மக்களிடையே உள்ள முரண்பாடுகளை பாடிய மகா கலைஞர் அவர். மக்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடிப் பாதையே, இடதுசாரிப் பாதையே சிறந்த வழி. அதைப் பின்பற்ற வாருங்கள் என்ற அறைகூவலோடு அவர் நிகழ்ச்சியை நிறைவு செய்வார். அவர் மறைந்து விட்டாலும் கட்சியின் வரலாற்றில் மறக்க முடியாத கலைஞர் திருமூர்த்தி.

தொடரும்...