பகத்சிங்கைப் போலவே, 1919ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையால் கோபம் கொண்ட சிங்கநிகர் இளைஞன் உத்தம் சிங்.படுகொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டு, பல சிரமங்களை எதிர்கொண்டு, பல நாடுகள் கடந்து, சமயம் பார்த்துக் காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்து அவர்களுடைய சொந்த மண்ணான இங்கிலாந்திலேயே பழிவாங்கியவன் உத்தம்சிங்.லண்டன் மாநகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கா னோர் முன்னிலையில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக் கயவன் ஜெனரல் ஓ.டயரைச் சுட்டு வீழ்த்தினான்.இறுதியாக மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, வெள்ளைக்கார நீதிபதி பேனா முனையை உடைத்த போது,“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமைஎனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான். உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத்த பெயர்! அவன் தனக்குத் தானே, தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர் ராம் முகம்மது சிங் ஆசாத்! இந்து, முஸ்லிம், சீக்கியர் ஒற்றுமையின் அடையாளமாகத் தன் பெயரை அவ்வாறு மாற்றிக் கொண்டவன் உத்தம்சிங்.
===பெரணமல்லூர் சேகரன்===
இன்று (ஜூலை 31) மாவீரன் உத்தம்சிங் நினைவு நாள்