tamilnadu

img

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் புதிய நெறிமுறைகள் அறிவிப்பு

புதுதில்லி, ஜூலை 21- நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத்தொடருக்கு, உறுப்பினர்களின் தனிநபர் இடைவெளியை உத்தரவாதப்படுத்துவதற்காக, புதிய நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தின் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாகக் கூடுகின்றன. கூட்டத்தொடர் நடைபெறும்போது இரு அவை உறுப்பினர்களும், இரு அவைகளிலும் பரவலாக உட்காருவார்கள். ஓர் அவை காலையிலும், மற்றோர் அவை மாலையிலும் கூடுகிறது. இடையில் இரு அவைகளையும் சுத்தப்படுத்துவதற்கு (sanitize செய்வதற்கு)ப் போதுமான கால அவகாசம் அளிக்கப்படுகிறது. மாநிலங்களவைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் சந்தித்து இவ்வாறான திட்டத்தை வகுத்திருக்கிறார்கள். மாநிலங்களவை 127 உறுப்பினர்களை, போதிய தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கமுடியும். அதேபோல் மக்களவை 290 உறுப்பினர்களை அனுமதிக்க முடியும். ஓர் அவையின் உறுப்பினர் அவருடைய அவையில் அமர இடம் கிடைக்காவிட்டால், அவர் மற்றோர் அவையில் அமர்ந்துகொண்டு கூட்டத்தொடரில் பங்கேற்பார். (ந.நி.)