tamilnadu

img

2003 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திருத்துக... விதிகளை ரத்து செய்க... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி:
2003 குடியுரிமைத் திருத்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் மற்றும் தேசிய மக்கள் தொகை தொடர்பான விதிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா,தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது, “எவரொருவரும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை,” என்றும், “எவரொருவரும் அப்பணி நடைபெறும்போது சந்தேகத்திற்குரிய நபர் என்று குறிக்கப்பட மாட்டார்கள்,” என்றும் கூறியிருக்கிறார்.

பாஜக அரசாங்கம், தன்னுடைய கூற்றில் நேர்மையான ஒன்றாக இருக்குமானால், பின்அது குடியுரிமைச் சட்டத்திற்கான திருத்தத்தின்கீழ் 2003 விதிகளில் திருத்தம் செய்திட வேண்டும்.விதிகளின் எண்களான 3, 4, 5, 5(ஏ), (பி), (சி) முதலானவை தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கான நடைமுறை குறித்து உருவாக்கப்பட்டவைகளாகும். தனிநபர்களின் அடையாளங்கள், மற்றும் அவர்களின் குடியுரிமை சந்தேகத்திற்குரியது என்றால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைக்கான நடைமுறைகள் மற்றும்  அம்மக்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆவணங்கள்அனைத்தும் அவற்றில்தான் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.

உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள உறுதிமொழியை நம்ப வேண்டுமானால், பின் இந்த அரசாங்கம் இந்த விதிகள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்திட வேண்டும். அப்போதுதான், குடியுரிமைச் சட்டத்திற்கு 2003இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள மேற்படி பிரிவுகளின்படி தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு சட்ட அங்கீகாரம் (legal status) அளிப்பது பயனற்றதாகும். எனவே, தேசியக் குடிமக்கள் பதிவேட்டை ரத்து செய்வதற்காக சட்டமும் திருத்தப்பட வேண்டும்.

உறுதி மட்டும் போதுமானதல்ல
மிகப் பெரும்பான்மை மக்கள் தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தம் மிகப் பெரும்பான்மை மாநில அரசாங்கங்கள், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு தங்கள் எதிர்ப் பினைத் தெரிவித்திருக்கின்றன. இவற்றை மதிக்கும் விதத்திலும், 2003 திருத்தம், தேசியக்குடிமக்கள் பதிவேட்டை ரத்து செய்வதற்குப் பொருத்தமான விதத்தில் திருத்தப்பட வேண்டும்.நாடாளுமன்றத்தில் உறுதி அளிப்பது மட்டும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு பின்னொரு தேதியில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு வசதிசெய்துதரும் விதத்தில் பயன்படுத்தப்பட மாட்டாது என்று  மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திடப் போதுமானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. சம்பந்தப்பட்ட விதிகள் ரத்துசெய்யப்பட வேண்டும் மற்றும் 2003 சட்டம் திருத்தப்பட வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.  (ந.நி.)

;