லக்னோ:
பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர்6 ஆம் தேதி சங்பரிவார கரசேவகர் களால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்பட 49 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.பாஜக தலைவர்கள் மீது தனிவழக்கு, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என்று இரண்டு வழக்குகளாகப் பிரிக்கப்பட்டன. தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நீதிமன்றத்திலும், கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோவிலும் நடந்து வந்தது.
1993 அக்டோபர் 5 அன்று எட்டு தலைவர்கள் உட்பட 40 பேர் மீது சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இரண்டு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ, ஒரு பெரிய சதி மற்றும் பாபர் மஸ்ஜித்மீது திட்டமிட்ட தாக்குதல் என்றுகுற்றம் சாட்டி 1996 ஜனவரி 10அன்று ஒரு துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐ ஆர்) இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர். எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதில், ரேபரேலி சிறப்பு நீதிமன்றம்அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு மீது விசாரணை நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைஅலகாபாத் உயர்நீதிமன்றமும் கடந்த2010 ஆம் ஆண்டு உறுதி செய்தது.அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பிலும், ஹாஜி மெஹபூப் அகமது என்பவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ் மற்றும் ரோஹின்டன் நாரிமன் அடங்கிய அமர்வு, 2017ஏப்ரல் 19அன்று அளித்த தீர்ப்பில், மீண்டும் இந்த வழக்கை விசா ரிக்க உத்தரவிட்டது. இதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக சுரேந்திர குமார் யாதவ் என்பவர்நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில்உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை நடந்துவந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிஆர்பிசி 313-ன் கீழ் நீதிபதி முன் காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி காணொலி மூலம் வாக்குமூலம் அளித்தார். அதற்கு முந்தைய நாள் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வாக்குமூலம் அளித்தார். இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.
இந்நிலையில் வழக்கில் இதுவரை 351 சாட்சியங்கள், 600 பக்க ஆவணங்களை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப் படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது. தீர்ப்பு தினத்தன்று வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுரேந்திர குமார்யாதவ் ஏற்கெனவே உத்தரவிட்டிருந் தார்.நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள உமா பாரதிக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஜராகவில்லை.இது தவிர பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் ,ராம ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் நிர்தியாகோபால் தாஸ் ஆகியோரும் நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இவர்கள் காணொலி மூலம் ஆஜராகினர்.குற்றம் சாட்டப்பட்டுள்ள வினய் கத்தியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்பட 26 பேர் ஆஜராகினர்.
2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்வாசித்தார். தீர்ப்பில்“ கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர்மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை. அசோக் சிங்கால் உள்ளிட்ட சங்பரிவார் தலைவர்கள் குழந்தை ராமர் சிலையைப் பாதுகாக்க விரும்பினர். பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த கும்பலைத் தடுக்க முயன்றனர். அவர்களைத் தூண்டவில்லை: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகஆதாரங்கள், சாட்சியங்கள் திடமாக இல்லை. ஆகவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று உத்தரவிட்டார்.
*****************
நீதித்துறையை எள்ளி நகையாடச் செய்யும் தீர்ப்பு : சிபிஎம் விமர்சனம்
பாபர் மசூதி இடித்தது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்தியா என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்கிற சித்திரத்தில் கறையை ஏற்படுத்தும் என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாபர் மசூதியை இடித்தது சம்பந்தமாக செப்டம்பர் 30 புதன்கிழமையன்று லக்னோ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லக்னோவில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம்,பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டிருந்த 32 பேர்களையும் விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பு, நீதித்துறையை பரிகசிக்கச் செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்தத்தீர்ப்பை அளிப்பதற்காக 28 ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. எனினும்கூட நீதி வழங்கப்பட வில்லை. மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அங்கே நின்று அந்தக் கிரிமினல்நடவடிக்கைக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த பாஜக-விஎச்பி-ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்த குற்றச்சாட்டில் அப்பாவிகள் என்று நீதிமன்றம் கண்டிருக்கிறது.
மேல்முறையீடு செய்திடுக!
சென்ற ஆண்டு நவம்பர் 8 அன்று அயோத்திதீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து மிகமோசமாக சட்டத்தை மீறிய செயல் என்று குறிப்பிட்டிருந்தது. இப்போது, லக்னோ நீதிமன்றம் இந்தக் குற்றத்தின் பிரதானக் கயவர்களை குற்றமற்றவர்கள் என்று கண்டிருக்கிறது.இந்தத் தீர்ப்பு, இந்தியா என்பது இந்திய அரசமைப்புச்சட்டத்தால் நிர்வகிக்கப்படும் மதச்சார்பற்ற-ஜனநாயக நாடு என்கிற சித்திரத்திற்குக் கறையை ஏற்படுத்திடும். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) உடனடியாக இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு தாக்கல் செய்திட வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)