புதுதில்லி:
2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம்வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்தியசாலைப் போக்குவரத்து -நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:‘2017, டிசம்பர் 1ஆம் தேதிக்கு முன்பாகவிற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என்பிரிவு (M and N ) 4 சக்கர வாகனங் களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1ஆம் தேதிமுதல் பாஸ்டேக் அட்டை கட்டாயமாக்கப்படு கிறது. மத்திய மோட்டார் வாகன விதிகள்1989இன்படி, 4 சக்கர வாகன உற்பத்தி யாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே பாஸ்டேக்எண்ணை அளிப்பதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் (பிட்னஸ் சர்டிபிகேட்) பெறும்போது, கண்டிப்பாக பாஸ்டேக்வைத்திருக்க வேண்டும். பாஸ்டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று தரப்படும்.
2019, அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்துநேஷனல் பெர்மிட் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுச் சட்டத் திருத்தத்தின்படி, வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்டேக் அட்டை வைத்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்கும்போது, பாஸ்டேக் அடையாள எண்ணை அளிப்பது கட்டாயமாகும். இந்த நடைமுறை மட்டும் 2021 ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும். அடுத்த இருமாதங்களுக்குள் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பாஸ்டேக் அட்டையை வாகனத்தில் ஒட்டிக்கொள்ள கால அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.