தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கிராமத்தில் பாப்பன்னபேட்டை பகுதியில் விவசாய நிலத்தில் கோவர்த்தன் என்பவர் 120 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டி போட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து அந்த கிணறு திறந்தே கிடந்தது.
இதையடுத்து புதனன்று கோவர்த்தன் மகன் சாய் வர்தன் தந்தை மற்றும் தாத்தாவுடன் அப்பகுதிக்கு வந்தான். எதிர்பாராத விதமான ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான்.
இதன்பின்னர் தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றின் அருகே மற்றொரு குழி தோண்டி 25 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணி நடைபெற்றது. சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. ஆனால் 10 மணி நேர மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் அதிகாலை 4 மணியளவில் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.