2000-த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள், 200-க்கும் மேற்பட்ட சிறார்களின் பங்களிப்பு, 200-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் விற்பனை, அற்புத மனங்களின் ஏகோபித்த ஆதரவு, நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் நீருக்கு ஒரு பாடல் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் வாயிலாக போட்டிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. வழக்கமான பரிசுகள் அறிவிக்கப்படும் போட்டி அல்ல இது. நீரின்றி அமையாது உலகு என்ற நம் மூத்தோர் சொல்லை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதும், உணர்த்துவதும் தான் இதன் பரிசு. அறிவிப்பு வெளியான உடனேயே இந்தியா முழுவதிலுமிருந்து 2000-க்கும் மேற்பட்டோர் தலைப்புக்கு தக்க புகைப்படங்களை அனுப்பி வைத்தனர். இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருந்தன அந்த புகைப்படங்கள். இதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று கத்தி முனையில் நடப்பது போல் நுட்பமாக தேர்வு செய்து 50 புகைப்படங்கள் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இந்தபுகைப்படங்கள் கடந்த 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ-வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காரணம் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினமாக அனுசரிக்கப்பட்டது. கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய லைட் அன்ட் லைஃப் அகாடமியின் நிறுவனரும், முன்னணி புகைப்படக் கலைஞருமான இக்பால் முகமது, ஒரு உயரிய நோக்கத்திற்காக லாப நோக்கின்றி அருமையான புகைப்படங்களை இந்தியா முழுவதும் இருந்து பார்ப்பது என்பதே நெஞ்சை நெகிழச் செய்தது என்றார். நீரை இப்படியெல்லாம் புகைப்படங்களாக பதிவு செய்ய முடியுமா என்று வியந்து போகுமளவுக்கு அட்டகாசமான புகைப்படங்களை கண்டு பார்வையாளர்கள். ஆச்சர்யப்பட்டு போனதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊட்டியில் செயல்பட்டு வரும் லைட் அன்ட் லைஃப் அகடாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ஏராளமான இளம் புகைப்பபட கலைஞர்கள் பங்கேற்றது குறிப்பிடவேண்டிய விஷயம். புகைப்படக்கலையின் மீதான ஆர்வம்குறையவில்லை என்பதற்கு சாட்சியாக இது இந்த நிகழ்வு இருந்தது.
பொதுவாக புகைப்பட கண்காட்சிகள் என்பது தனியான அரங்கில் நடைபெறும். ஆனால் எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்தில் இத்தகைய கண்காட்சியை நடத்தியபோது மக்கள் காட்டிய ஆர்வமும், ஒரு புகைப்படத்தோடு ஒன்றிப்போய் தியானம் போல அதனை பார்த்து மகிழ்ந்ததும் புகைப்படக் கலைக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாகவும் இக்பால் அகமது தெரிவித்தார். செயல் தான் ஆகச் சிறந்த சொல் என்பார்கள். அதுபோல வெறும் புகைப்பட கண்காட்சி என்பதாக மட்டுமல்லாமல் கடந்த 18-ந் தேதி சிறுவர்களுக்கு நீர் நாயகர்கள் என்ற தலைப்பில் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பதே இந்த போட்டியின் கருவாகும். 200-க்கும் மேற்பட்ட சிறார்கள் இதில் பங்கேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ முழுவதும் சுற்றி பொதுமக்களின் நீர் சேமிப்பு முறைகளை பற்றி எடுத்துரைத்து வருங்கால தலைமுறை ஒரு அறிவார்ந்த தலைமுறை என்பதை நிரூபித்துக் காட்டினர். வருங்காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என்று 200-.க்கும் மேற்பட்ட சிறார்கள் உறுதிமொழி ஏற்றது பார்த்தவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.
எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகத்தில் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களும் நீருக்கு ஒரு பாடல் நிகழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன. புகைப்படக் கலைஞர்களை பாராட்டியும், புகைப்படங்களை வாங்கியும் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தினர். இளைஞர்கள் சங்கமிக்கும் மற்றும் நவீன சென்னையின் அடையாளமாக திகழும் இந்த மாலில் இத்தகைய சமூக சிந்தனையுள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது நாடு முழுவதும் ஒரு கவன ஈர்ப்பை தந்த வகையில் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் எக்ஸ்பிரஸ் அவென்யூவின் சிஆர்ஓ முனிஸ் கண்ணையா.
மழையின் ஒரு துளி நீர் தான் மாபெரும் கடல்களை உருவாக்கிறது என்பதை உணர்த்தும் வகையிலான ஆகச்சிறந்த புகைப்படங்கள் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. வெறும் புகைப்படமாக மட்டுமல்லாமல், தபால் அட்டைகளாகவும், புத்தக அட்டைகளாகவும் அவை பரிணமித்திருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியில் திரட்டப்பட்ட நிதியானது, இந்திய ஏரிகளை மீட்டெடுக்கும் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இஎஃப்ஐ என்ற அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த புதுமையான முயற்சி நடைபெற்ற நான்கு நாளும், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துச் சென்றனர். உயர்ந்த லட்சியத்திற்காக தங்கள் பங்களிப்பை ஆற்றிய புகைப்படக் கலைஞர்களுக்கும் பொதுமக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். சென்னையின் இளைஞர் பட்டாளமும், மூத்த புகைப்படக் கலைஞர்களும், புகைப்படக் கலை மீது ஆர்வம் கொண்டவர்களும் பெரும் படையென இங்கு வருகை தந்திருந்தனர். வெறும் புகைப்படங்களை பார்ப்பது மட்டும் என்றில்லாமல் அது உணர்த்தும் செய்தியினையும் அவர்கள் உள்வாங்கிச் சென்றதே இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம். 200-க்கும் மேற்பட்டோர் விலையைப் பற்றி கவலைப்படாமல் இயற்கையின் அற்புதத்தை படம்பிடித்த புகைப்படங்களை வாங்கிச் சென்றதே இதற்கு சாட்சி. இன்னும் ஒருசிலர் புகைப்படங்களுக்கு தக்க கவிதைகளை எழுதுவதாகவும் வாக்களித்துச் சென்றனர்.