tamilnadu

img

ஊட்டச் சத்தற்ற மக்களின் தேசம்...

புதுதில்லி:
ஊட்டச்சத்துக் குறைவால் சமத்துவமின்மை அதிகரித்துள்ள நைஜீரியா மற்றும் இந்தோனேசியாவுடன் இப்போது இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.

உலகில் உள்ள 88 நாடுகள் 2025க்குள் தங்கள் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஊட்டச்சத்துள்ள உணவை அளிப்பதாகக் கூறியிருந்தன. இந்தக் குறியீட்டை இந்தியாவால் நிறைவேற்ற முடியாமல் போகலாம் என்று செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ள உலக ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையில், ஊட்டச்சத்தில் குடும்ப சமத்துவமின்மை அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

2012இல் உலக சுகாதார மன்றம் 2025 வாக்கில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு ஆறு வகையான  ஊட்டச்சத்துக்களை அடையாளம் காட்டியிருந்தது. மேலும் அது, எடை குறைவாக இருக்கும் குழந்தைகள், ரத்த சோகையுடன் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள் குழந்தை பிறந்த முதல் ஆறுமாத காலத்திற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிதன் அவசியம் முதலானவற்றை வலியுறுத்தியிருந்தது.  

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள 2020ஆம் ஆண்டு உலக ஊட்டச்சத்து அறிக்கையின்படி,  ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் எடை, பெண்களின் ரத்தசோகை, குழந்தைகள் அதீத எடை மற்றும் தாய்பாலின்மை முதலான ஊட்டுச்சத்துக்கான நான்கு அம்சங்களையுமே 2025இல் நிறைவேற்ற இயலாமல் போகலாம் என்று கூறியிருக்கிறது.  

குறைந்த எடையுள்ள குழந்தைகள்
2000க்கும் 2016க்கும் இடையே, குறைந்த எடையுள்ள குழந்தைகளின் விகிதம் ஆண் குழந்தைகளுக்கு 66.0 சதவீதத்திலிருந்து, 58.1 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கு 54.2 சதவீதத்திலிருந்து 50.1 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. எனினும், ஆசியாவின் சராசரியான ஆண் குழந்தைகள் 35.6 சதவீதம், பெண்குழந்தைகள் 31.8 சதவீதம் என்பதுடன் ஒப்பிடும்போது, இவை மிகவும் அதிகமாகும். மேலும், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 37.9 சதவீதத்தினர் வளர்ச்சி குன்றி காணப்படுகின்றனர் என்றும், 20.8 சதவீதத்தினர் நலிவடைந்து காணப்படுகின்றனர் என்றும் இது ஆசியாவின் சராசரியான முறையே 22.7 சதவீதத்துடனும் 9.4 சதவீதத்துடனும் ஒப்பிட்டால் எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புலப்படும் என்றும் கூறியிருக்கிறது.

அதேபோன்று கருத்தரிக்கும் நிலையில் உள்ள தாய்மார்களில் இருவரில் ஒருவர் ரத்த சோகையுடன் காணப்படுவதாகவும், அதேபோன்று அதிக எடை மற்றும் உடல்பருமன் உடைய பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றும், இது வயதுவந்தவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினரைப் பாதித்திருக்கிறது என்றும், பெண்களில் 21.6 சதவீதமாகவும், ஆண்களில் 17.8 சதவீதமாகவும் இவர்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.மக்களிடையே சமத்துவமின்மை வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் உலகில் மிகவும் மோசமாகவுள்ள நைஜீரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் இப்போது இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.  

வளர்ச்சியின்மை
இந்தியாவில் தேவையான வளர்ச்சியின்றி இருக்கும் மக்கள் உத்தரப்பிரதேசத்தில் 40 சதவீதத்தினர் இருக்கிறார்கள். மேலும் போதிய வளர்ச்சியின்றி இருப்பவர்கள், நகரத்திலிருப்பவர்களைவிட கிராமப்புறங்களில் 10.1 சதவீதம் அதிகமாக இருக்கிறார்கள்.கோவிட் 19-கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் போராடிக்கொண்டிருக்கிற இந்த சமயத்தில், மக்கள் மத்தியில் காணப்படும் ஊட்டச்சத்தின்மையைப் போக்கவேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்தி இருக்கிறது.
(ந.நி.)

;