tamilnadu

img

தில்லியில் சிஏஏ - க்கு  எதிராகப் போராட்டங்கள் நடந்தபோது உணவு வழங்கியவர்மீது குற்ற அறிக்கை தாக்கல்

தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஷாஹீன்பாக் பகுதியில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்துவந்த சமயத்தில் அதில் பங்கேற்றவரும், அந்த சமயத்தில் பங்கேற்றவர்களுக்கு சமூக சமையல்கூடம் அமைத்து உணவு வழங்கி வந்தவருமான பிந்த்ரா என்பவர் மீது, வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரங்களுடன்  தொடர்புடையவர் என்று குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சீக்கியரான பிந்த்ரா என்பவர், ஒரு சமூக செயற்பாட்டாளர். தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாஹீன்பாக் பகுதியில் முஸ்லீம் பெண்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில், போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களுக்கு  சீக்கிய மதத்தில் அளிப்பதுபோன்று சமூக சமையல்கூடம் அமைத்து, அனைவருக்கும் உணவு வழங்கி வந்தார். அவரை, வடகிழக்கு தில்லி கலவரங்களுடன் தொடர்பு உண்டு என்று குற்றஞ்சாட்டி, தில்லிக் காவல்துறையினர் தலைமைக் காவலர் ரட்டன் லால் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்.

அவருடைய “பங்களிப்பு குறித்து விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,” என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.  

குற்ற அறிக்கையில் இரு காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலங்கள் அளித்திருக்கின்றனர். அவர்கள், பிந்த்ரா மற்றவர்களுடன் சேர்ந்து, கிளர்ச்சிப் போராட்டம் நடந்த இடத்தில் “ஆத்திரமூட்டும்” விதத்தில் அறிக்கைகளை ஏற்படுத்தியதாகக் கூறியிருக்கின்றனர். குற்ற அறிக்கையின்படி, பிந்த்ராவும் சம்பந்தப்பட்டிருந்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் கூறியிருக்கின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர், பிந்த்ரா சமூக சமையல் கூடம் அமைத்திருந்ததாகவும், அதனால் ஏராளமானவர்கள் அங்கே கூடுவதற்கு அதனைப் பயன்படுத்தினார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

ஷாஹீன்பாக் பகுதியில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்துவந்த சமயத்தில், பிந்த்ரா அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியிருந்தார். அவர் சீக்கியர்கள் தங்கள் குருத்வாராக்களில் வழங்குவதுபோன்று சமூக சமையல்கூடம் அமைத்து, அங்கிருந்த அனைவருக்கும் உணவு வழங்கிவந்தார். இதற்காக அவர் தன்னுடைய சொத்துக்களை விற்றதாகக்கூடி சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகள் வந்திருந்தன.

பிந்த்ரா குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்து வந்தார். தன் கருத்தை தன்னுடைய முகநூல் பக்கத்திலும் அவர் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார்.  

மேலும் பிந்த்ரா சமூக முடக்கக் காலத்தில் உணவின்றி வாடிய தொழிலாளர்களுக்கும் உணவு அளித்து வந்திருக்கிறார்.

பிப்ரவர் 24 அன்று வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது 52 பேர் கொல்லப்பட்டார்கள், எண்ணற்றவர்கள் காயம் அடைந்தார்கள். தில்லிக் காவல்துறையினர் இதுதொடர்பாக இதுவரை 600 பேர்களுக்கு எதிராக 80 குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

(ந.நி.)