நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன.
மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் நாட்டின் உணவுத்தொழிலை ஒப்படைக்கும் செயல் என்று கடும் விமர்சனங்களும், பஞ்சாப், ஹரியாணா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாக்களை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் மாநிலங்களை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வெறும் குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் மசோதா நிறைவேறியதாக அறிவித்தார்.
இதனால் அதிருப்திக்கு உள்ளான எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதைத்தொடர்ந்து பாஜக நாடாளுமன்ற விவகார அமைச்சர் வி.முரளிதரன் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதனையடுத்து திரிணமூல் எம்.பி. டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதாவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.கே.ராகேஷ், காங்கிரஸ் எம்.பி.க்கள் சையத் நாசர் ஹுசைன், ரிபுன் போரா, ஏ.ஐ.டி.சியின் டோலா சென், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளமாறம் கரீம் ஆகியோர் ஒருவாரத்துக்கு அவை நிகழ்ச்சிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அவைத்தலைவரிடம் நோட்டீஸ் அளித்து உள்ளனர். ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.
காரணம் அவைத் துணைத்தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முறையான வடிவத்தில் இல்லை என்றும் இதற்கு 14 நாள் நோட்டீஸ் அளிப்பது அவசியம் என்றும் எனவே இந்தத் தீர்மானத்தை நிராகரிக்கிறேன் என்று வெங்கய்ய நாயுடு மறுத்து விட்டார்.