புதுதில்லி:
நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2019-ஆம் ஆண்டில் 7.3 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau)அறிக்கை வெளியிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 78 ஆயிரத்து 236 வழக்குகள் பதிவாகி இருந்தது.இதுவே, 2019ஆம் ஆண்டில் 4 லட்சமாக அதி கரித்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது.மேலும், தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11 ஆயிரத்து 829 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்ததாக ராஜஸ்தானில்6 ஆயிரத்து 794 வழக்குகளும், பீகாரில் 6 ஆயிரத்து 544 வழக்குகளும் பதிவாகி உள்ளன என்று ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.