tamilnadu

img

உணவு, சிகிச்சையின்றி புலம்பெயர் தொழிலாளர்களின் 3 குழந்தைகள் பலி

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கில் மேலும் ஒரு சோகமாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில் உணவு, உரியநேர சிகிச்சை இல்லாமல் 3 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளனர். 

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் வருமானமின்றி,உணவின்றி அவதிப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் வேலை செய்த வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் குழந்தைகள்,மனைவியுடன் தங்களது பொருட்களை சுமந்துகொண்டு கொளுத்தும் வெயிலில் நடந்தே செல்கின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வாகனப்போக்குவரத்தை ஏற்பாடு செய்யாமல்,இவர்களைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மோடி அரசு, பொதுத்துறைகளை விற்பனை செய்வதிலே கவனமாக உள்ளதாக மக்கள் கொதிப்புடன் கூறுகின்றனர். இதில் நடந்தே சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மோதியும் வாகனங்கள் மோதியும் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். 

தில்லி ரயில் நிலையத்தில் இருந்து அன்றாடம் பல சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களுக்காக விடப்படுகின்றன. தொழிலாளர்கள் ரயிலில் ஏறும் போதும், வழியில் அவை நிறுத்தப்படும் போதும் உணவளிக்க திட்டமிடப்பட்டு வந்தது. இவை, அரசு அல்லது சமூகவேவை அமைப்புகளால் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.எனினும் உணவு வழங்குவதில் பெரும் குறைபாடுகளால் உயிர்கள் பலியாகியுள்ளன.  இதில் பீகார் தொழிலாளர் பிண்ட்டு ஆலமின் 4 வயது குழந்தை இர்ஷத் செவ்வாயன்று ஓடும் ரயிலில் இறந்தது.

இது குறித்து பிண்ட்டு ஆலம் கூறுகையில், பசியால் எனது மகன் துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உணவளிக்க வழியில் வந்த ரயில் நிலையங்களிலும் கடைகள் இல்லை. இதை வாங்க என்னிடம் பணம் இருந்து பலனளிக்காமல் எனது மகனை இழந்துவிட்டேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.மற்றொரு சிறப்பு ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்த சர்வேஷ்சிங்(35) என்பவரின் ஒரு மாத பிஞ்சுக்குழந்தையும் கோரக்பூர் செல்லும் வழியில் செவ்வாயன்று ரயிலில் பலியானது. கடுமையானக் காய்ச்சல் ஏற்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் குழந்தை இறந்துள்ளது.இது குறித்து சர்வேஷ்சிங் கூறுகையில்,ஜான்சியை கடந்த போது ரயில்வேதுறையின் அவசர உதவி தொலைபேசியில் புகார் அளித்தேன். ஆனால், சிகிச்சைக்காக அடுத்த 2 மணி நேரத்தில் வந்த ஒரய் ரயில் நிலையத்தில் மருத்துவர் பார்ப்பதற்குள் குழந்தையின் உயிர் பிரிந்தது என்றார்.கடந்த மே 23 ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசம் அலிகர் மற்றும் டூண்ட்லா ரயில் நிலையங்களுக்கு இடையே 10 மாத குழந்தை ஓடும் ரயிலில் மூச்சுத்திணறலால் இறந்தது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அடைந்துவரும் துயரங்களில் நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் பீகாரின் முசாபர்பூர்  ரயில் நிலையத்தில் புதனன்று நடந்தது. ஒரு குழந்தை, போர்வையால் மூடப்பட்டிருந்த தனது தாயின் முகத்தைப் பார்க்க, அந்தப் போர்வையை விலக்குவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சிரமப்பட்டு தாயின் முகத்தைப் பார்த்துவிட்டது. அந்தத் தாயின் முகத்தில் அசைவில்லை. மரணமடைந்து உயிரற்றவராகக் கிடந்தார். 23 வயதே நிரம்பிய அந்தத் தாயின் இரண்டு வயது குழந்தைக்கு, தாய் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்கவில்லை என்று புரியவில்லை. குஜராத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ரயிலில் கிளம்பிய குடும்பம் இது. அகமதாபாத்தில் ரயில் ஏறிய இவர்களிடம் கையில் காசு இல்லை. வழியில் உண்பதற்கு உணவோ, குடிநீரோ இல்லை. உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் வந்தார்கள். இந்தப் பெண்ணின் சகோதரியும் அவரது கணவரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் உடன் வந்திருக்கிறார்கள். முசாபர்பூரைத் தாண்டி கத்தியார் எனும் ஊருக்கு செல்ல வேண்டும். ஆனால் முசாபர்பூருக்கு முன்பே ரயிலுக்குள்ளேயே மயங்கிய அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. ரயில்வே அதிகாரிகள் முசாபர்பூர் ரயில்நிலையத்திலேயே இவர்களை இறங்குமாறு நிர்ப்பந்தித்து இறக்கிவிட்டுவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் ரயில்வே நடைமேடையில் தனது சகோதரியின் உடலைக் கிடத்திவிட்டு மற்றொரு சகோதரி காத்திருந்தார். அந்த சமயத்தில்தான் அவரது இரண்டு வயதுக் குழந்தை போர்வையால் மூடப்பட்டிருந்த தாயின் முகத்தைப் பார்க்க தவித்துக் கொண்டிருந்தது.

(என்டிடிவி)

;