tamilnadu

img

172 பேரை தூக்கிலிட தீர்ப்பளித்த நீதிபதி... - முசாபர் அகமது

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள் -   ..நேற்றைய தொடர்ச்சி

மத்திய இரகசிய புலனாய்வுத் துறையின் இயக்குநர் கர்னல் கேயின் வேண்டுகோளின்படி பத்திரிகைகள் இந்த வழக்கை கான்பூர் போல்ஷெவிக் சதிவழக்கு என்று விசேடமாகக் குறிப்பிட்டன. இதன் மூலம் சோவியத் எதிர்ப்புப் பிரச்சாரத் தேவைக்காக சோவியத் ரஷ்யாவையும் உட்படுத்துவதென கேய் கருதினார்.    இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, ஒருவரை அடிக்கடி பார்வையாளர் காலரியில் கண்டேன். அவரது பெயர் சத்யபக்தா. அது எவ்விதத்தில் பார்த்தாலும் அவரது தாய் - தந்தையர் இட்டபெயராக இல்லை. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருக்கும் போது அவர் தமக்கு வைத்துக் கொண்ட பெயரே இது. ஒருவேளை, அங்கு அவருக்கு சத்தியத்துடன் ஏராளமாக பரிசோதனைகள் நடந்திருக்க வேண்டும்.

இந்த வழக்கு பிறகு செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஒவ்வொருவருக்கும் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். இந்த நீதிபதி எச்.எல்.ஹோமே ஒரு பிரசித்தி பெற்ற நபர். இவர்தான் பிரசித்தி பெற்ற சௌரிசௌரா வழக்கில் 172 பேரைத் தூக்கிலிட்டுக் கொல்ல தீர்ப்பளித்தார். வெவ்வெறான நான்கு சிறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த எங்களது கழுத்திலும், காலிலும் இரும்புச் சங்கிலிகள் பிணைக்கப்பட்டிருந்தன. அக்காலத்தில் உத்தரப்பிரதேசச் சிறைகளில் அப்படிச் செய்வதுதான் வழக்கமாக இருந்தது. புற உலகிலிருந்து எங்களை முற்றிலும் தனிமைப்படுத்தினர். ஒரு பக்கத்தில் இப்படியிருக்க, மறு பக்கத்தில் முதலில் சொல்லப்பட்ட சத்யபக்தா என்பவர் தாம் ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் அறிவித்தார்.

ஒரு தடவை ராய்பரேலி மாவட்டச் சிறையில் நான் இரத்த வாந்தி எடுத்தேன். சரியான உணவு தேவையான அளவு கிடைக்காததினாலும் தங்கும் வசதி மோசமாக இருந்ததனாலும் ஏற்பட்ட ஆரோக்கியச் சீர்குலைவே இதற்குக் காரணம். சிறையிலிருக்கும் சிவில் சர்ஜன் என் உடல்நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது என் உடல்நிலை சிறிதும் மோசமில்லை என்று  சொன்னாலும் நான் படிப்படியாக பலவீனமடைந்தே வந்தேன். கடுங்குளிரில் வாடுவதினால் எனக்கு மிக அதிகம் தூக்கம் குறைந்து போனது.  இந்த நிலையிலிருந்த என்னை அல்மோரா மாவட்டச் சிறைக்கு மாற்றினர். விடுதலைக்காலம் முடிவதற்கு முன்னரே உடல்நிலை மோசமான காரணத்தால் இந்திய அரசாங்க உத்தரவுப்படி 1925ஆம் ஆண்டு செப்டம்பரில் என்னை விடுதலை செய்தனர். 

கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு

சத்யபக்தாவின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நான் அங்கு பத்திரிகையில் முதன்முதலில் படித்தறிந்தேன். டிசம்பர் கடைசி வாரத்தில் கான்பூரில் ஒரு கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கவிருக்கிறதென்பதையும் பத்திரிகைகளில் படித்தேன்.  மாநாட்டில் தலைமை வகிப்பதற்காக, லண்டனிலிருக்கும் சபூர்ஜிசக்லத்வாலாவைக் கேட்டுக்கொண்டனர். முதலில் மாநாட்டில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதாகவும், கடைசியில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு அதற்கான அனுமதியை வழங்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. அல்மோராவில் இருந்த எனக்கு சத்யபக்தா ஒரு கடிதம் அனுப்பினார். சிறையிலிருந்து விடுதலையான என்னை அதில் வாழ்த்தியிருந்தார். கான்பூர் மாநாட்டில்  கலந்துகொள்ள வேண்மெனவும் என்னை அவர் தமது கடிதத்தில் அழைத்திருந்தார்.

தன்னம்பிக்கை

உடல்நலமடைந்திருந்தேன். அதுமட்டுமன்றி, அல்மோராவில் தட்பவெப்ப நிலை டிசம்பர் கடைசியில் தண்ணீரைப் பனிக்கட்டியாக்கும் நிலையையும் அடைந்திருந்தது. அப்படிப்பட்டதொரு நிலையில் எப்படியாவது கல்கத்தாவுக்குத் திரும்ப வேண்டிய அவசியமிருந்தது.  கான்பூரை அடைந்தபோது அங்கு எஸ்.வி.காட்டே, கே.எல்.ஜோக்லேகர், ஆர்.எஸ்.நிம்ப்கர் ஆகியோர் முன்கூட்டியே வந்திருந்ததைக் கண்டேன் அவர்களைக் கண்டபோது எனக்குத் தன்னம்பிக்கை கிட்டத்தட்ட மீண்டும் கிடைத்தது. எப்படியெனில், சிறையில் இருந்தபோது இந்த மூவரைப் பற்றியும் டாங்கேயிடமிருந்து தெரிந்துகொண்டேன். கான்பூரில் அயோத்யாபிரசாத் ஜானகி பிரசாத், பாகர்ஹட்டா முதலிய ஏனைய சிலரையும் நான் முதல்முதலாக தெரிந்து கொண்டேன். 

கான்பூர் மாநாடு

கான்பூர் மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக மௌலானாஹஸ்ரத் மொகானியும், முக்கியத் தலைவராகச் சிங்காரவேலரும் இருந்தனர். (எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, சிங்காரவேலர் கான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பவில்லை. உண்மையில் அவருக்கு எதிராக அதிகமான சான்றுகள் இல்லை).

கருத்து மோதல்

மாநாட்டின் ஆரம்பத்திலேயே எங்களது கருத்து, சத்யபக்தாவின் கருத்தோடு மோதியது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழக்கப்படி கட்சியின் பெயர் “கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா” என இருக்க வேண்டுமென்று நாங்கள் கருதினோம். சத்யபக்தாவோ தனக்குச் சர்வ தேசியத்தில் நம்பிக்கை இல்லை என்பதைத் தெரிவித்தார். தம்முடைய கட்சி இந்தியத்தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டுமென்பது  அவரது கருத்து. நாங்கள் எங்கள் கருத்தில் ஊன்றி நின்றோம். சத்யபக்தா தம்முடைய காகிதங்களையும், ஃபைல்களையும் விட்டுவிட்டு மாநாட்டு இடத்தை விட்டே போய்விட்டார். அவர் தமது கட்சியில் 300க்கு மேலான உறுப்பினர்கள் இருப்பதாகச்சொன்னார். இவர்கள் யார் யார் என்பதை எங்களால் ஒருபோதும் அறியமுடியவில்லை. மாநாட்டுக்குப் பிறகுநான் ஒருபோதும் சத்யபக்தாவைக் காணவில்லை. ஒருமுறை பம்பாயில் அவரை எஸ்.வி.காட்டே கண்டதாகக் கேள்விப்பட்டேன். தான் அரசியலிலிருந்து விலகிவிட்டதாக காட்டேயிடம் சத்யபக்தா சொன்னாராம்.

... தொடரும்