சபரிமலையை அலங்கோலமாக்கும் சதித்திட்டம்
கொச்சி, நவ.26- சபரிலை செல்வதாககூறி கேரளத்திற்கு செவ்வாயன்று காலையில் வந்த திருப்தி தேசாய் மற்றும் அவரது கூட்டாளிகளை கொச்சி நகர காவல் ஆணையர் அலுவலக வளா கத்தில் பாஜகவினர் மறித்து ரகளையில் ஈடு பட்டனர். இது சபரிமலையை அலங்கோல மாக்கும் சதித்திட்டம் என தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். கொச்சிக்கு திருப்தி தேசாய் வருவது பாஜக வினருக்கு எப்படி தெரியும் என்கிற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. ஆணையர் அலு வலகத்திற்கு திருப்தி தேசாய் வருவதற்கும் அரை மணி நேரம் முன்புதான் தங்களுக்கு தெரிய வந்ததாக பாஜக தலைவர்கள் கூறி னார்கள். பாஜகவின் ஜனம் டிவி திருப்தி தேசாய் வருவதற்கு முன்பே தனது நேரடி ஒளிபரப்பை துவக்கியது. ஆனாலும், விமான நிலையத்தில் தடுக்க கடந்த ஆண்டுபோல் எவரும் காத்தி ருக்கவில்லை. இவை அனைத்தும் பாஜக – சங்பரிவார் அமைப்பினரின் திட்டமிட்ட நாடகம் என்பது திருப்தி தேசாய் வருகை மூலம் அம்பல மாகி உள்ளது.
திருப்தி தேசாயுடன் வந்திருந்த பிந்து அம்மா முகத்தில் மிளகு கரைசலை பீய்ச்சி யடித்த சங்பரிவார் அமைப்பை சேர்ந்த ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார். கண்ணூரைச் சேர்ந்த இவர் எப்படி நகர காவல் ஆணையர் அலுவல கத்திற்கு வந்து சேர்ந்தார் என்பதும் நாடகத்தின் பகுதியாகும். சபரிமலை செல்ல காவல்துறை யினர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து திருப்தி தேசாய் குழுவினர் மும்பை திரும்பினர். சபரிமலையில் அனைத்து வயது பெண் களும் வழிபடலாம் என்கிற உச்சநீதிமன்றத் தின் தெளிவான தீர்ப்பை கேரள அரசு அமல் படுத்தியாக வேண்டிய கட்டாயம் கடந்த ஆண்டு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி தீர்ப்பை முதலில் வரவேற்ற சங்பரிவார் அமைப்பினர் தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொண்டனர். சபரிமலைக்கு வரும் பெண்களை தடுப்பதாக கூறிக்கொண்டு பெரும் ரகளையில் ஈடுபட்ட னர். பாஜக-சங்பரிவாருக்கு சளைத்தவர்களா நாங்கள் என்பதுபோல காங்கிரஸ் கட்சியின ரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் 7 நீதிபதி கள் கொண்ட விரிவான அமர்வுக்கு விடப்பட் டுள்ளது. முந்தைய தீர்ப்பு குறித்து தெளிவற்ற நிலை உள்ளது. இது பாஜக- சங்பரிவார் அமைப்பினருக்கு ஏமாற்றமளித்தது. ஆனா லும் சமூக செயற்பாட்டாளர்கள் என கூறிக் கொள்வோர் மூலம் தங்களது திட்டத்தை அரங்கேற்றும் பணியை துவக்கியுள்ளனர்.
அலங்கோலமாக்கும் முயற்சி
திருப்தி தேசாய் வருகை குறித்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: திருப்தி தேசாயின் வருகைக்கு பின்னால் சதித்திட்டம் உள்ளது. சபரிமலை புனிதபய ணத்தை அலங்கோலமாக்கும் திட்டமாகும் இது. பாஜகவுக்கு செல்வாக்குள்ள மகா ராஷ்டிராவிலிருந்து ஒரு குழுவாக பெண்கள் சபரிமலைக்கு புறப்பட்டது, அதிகாலை 5 மணிக்கு நெடும்பச்சேரி (கொச்சி) விமான நிலையம் வந்தது, கேரளத்தில் உள்ள ஒரு டிவி சானல் மட்டும் முன்னதாகவே தகவல் தெரிந்து செயல்பட்டது, தொடர்ந்து கோட்டயம் வழியாக சபரிமலை செல்வதாக பயணத்தை துவக்கினர். ஆனால் அவர்கள் நகர காவல் ஆணையர் அலுவலகம் சென்றனர். அதை முன்னதாக அறிந்ததுபோல் ஒரு கும்பல் அங்கு காத்திருக்கிறது. அங்கு பெண்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பின்னால் தெளிவான திரைக்கதையும், நிகழ்ச்சி நிரலும் உள்ளதாக கருதுவதில் தவறில்லை. நான் அவ்வாறு கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.