tamilnadu

புதுச்சேரியில் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை

புதுச்சேரி, மார்ச் 18 - மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லை என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- உலக சுகாதார மையம் கொரோனா தொற்று   பரவாமல் இருக்க தற்போதுள்ள சுகாதாரத்தை வலுப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரி சுகாதாரத்துறை யை வலுப்படுத்த ஆட்கள் தேவைப்படுகின்றனர். எனவே பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், பல்மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், பிசியோ தெரபி மற்றும் பேராமெடிக்கல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை கிடையாது. அனைத்து மாணவர்களும்  சுகாதாரத்துறையை வலுப்படுத்த அழைத்துக் கொள்ளப்படுவர். புதுச்சேரி சுகாதாரத்துறை  இயக்குனர் தேவையான இடங்களில் அவர்களை பணியில் அமர்த்துவார். இதற்கு அனைத்து கல்லூரி தலைவர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.