புதுச்சேரி, மே 28-சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஆளுநர் கிரண்பேடி மீறுவதாக கூறி புதுவை பெரியகடை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆளுநர் கிரண்பேடி புதுவை அரசின் அன்றாட பணிகளில் தலையிடுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசின் அன்றாட பணிகளில் ஆளுநர் தலையிடக்கூடாது, அரசு அலுவல் பணிகள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளம் மூலமாக பகிரக் கூடாது என்று கூறியது. ஆனால், இந்த உத்தரவை ஆளுநர் மீறுவதாக கூறி புதுவை பெரியகடை காவல்நிலையத்தில் புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் புகார் கொடுத்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 30.4.2019 அன்று வழங்கிய தீர்ப்பில் ஆளுநர் மற்ற அதிகாரிகள், பொது மக்களின் குறை கேட்டல் என்ற பெயரில் சமூக வலைதளங் களை பயன்படுத்தக் கூடாது, அரசு அதிகாரிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட பொது ஊடகங்களையே பயன்படுத்த வேண்டும்.தனியார் வலைதளங்களின் கணினி சேவை மையங்கள் வெளிநாடுகளில் உள்ளதால் அரசு ரீதியாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் உள்ளது. ஆனால், ஆளுநர் கிரண்பேடி தனது வலைதளத்தில் தொடர்ச்சி யான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதிகாரிகளிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி வருகிறார். இது, நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப் பட்டுள்ளது.இதேபோல் இந்திய தேசிய இளைஞர் முன்னணி சார்பிலும் ஆளுநர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த புகார் மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை.