tamilnadu

இந்து ராஜ்ஜியமாக்குவதே பாஜக-வின் நோக்கம் புதுவை முதல்வர் சாடல்

புதுச்சேரி, ஆக. 20- ராஜீவ்காந்தியின் 75 வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இவ்விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி,“ ராஜூவ் காந்தி பிரதமராக இருந்தபோது சிறிய மாநிலம்,பெரிய மாநிலம் என்று வித்தியாசம் பார்க்கவில்லை. மதம், பிரிவினை வாதம், தீவிரவாதம் ஆகியவைகளுக்கு இடம் கொடுக்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்தார். ஆனால் தற்போது இந்து மதத்தினரை வைத்து ஆட்சி நடக்கின்றது. பிற மதத்தினர் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார். காஷ்மீரில் 4 ஆயிரம் பேர் சிறைக்கைதிகளாக உள்ளனர். அங்கு அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் உள்ளது. காஷ்மீர் அழகான பிரதேசம். ஆனால் அங்குள்ள மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அவர்களது உரிமை பறிக்கப்படுகின்றது. புதுச்சேரி, தில்லியை அடுத்து ஜம்மு காஷ்மீரும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு உள்ள அதிகாரம் தில்லிக்கு இல்லை. தில்லிக்கு இருக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீருக்கு கிடையாது. அனைத்தையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டது. இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே பாஜக வின் நோக்கமாக உள்ளது என்றும் முதலமைச்சர் கடுமையாக சாடினார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுள் வாஸ்னி, சஞ்சய்தத், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் விழாவில் பங்கேற்றனர்.