புதுதில்லி:
அடிப்படை பிரச்சனைகளான, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், விவசாயம் குறித்து பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்த தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் நள்ளிரவில் பணமதிப்பு நீக்கம் என்ற அதிர்ச்சியை தந்து ஏழை மக்களை மோடி கடுமையாக காயப்படுத்தினார். ஆனால், நாங்கள் நியாய் திட்டத்தின் மூலம் இழந்த பொருளாதாரத்தை மீண்டும் சீர்படுத்துவோம். நாங்கள் சொன்ன ரூ. 72 ஆயிரம் மக்கள் கையில் எளிதில் சென்றடையும், அதனை அவர்கள் உடனடியாக செலவு செய்வார்கள். இது பொருளாதாரம் வளருவதற்கு உதவியாக இருக்கும்.
இப்போது நாட்டின் பெரும் பிரச்சனையாக இருப்பது வேலை வாய்ப்பின்மை. மோடி நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொன்னார். அது என்னவானது என்று நாடு, மோடியை கேட்கிறது. ஆனால், விவசாயிகள் பற்றியும் வேலை வாய்ப்பின்மைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை பேசுவதில்லை.
தைரியம் இருந்தால், இந்த விஷயங்கள் பற்றி என்னுடன் அவர் விவாதம் நடத்தத் தயாரா? அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வீடியோ கேமில் மட்டும்தான் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரதமர் மோடி கூறி இருப்பதன் மூலம் காங்கிரசை அல்ல, ராணுவத்தை அவமதித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
நான் அவருக்கு ஒன்றைக் கேட்கிறேன். மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? காங்கிரஸ் கட்சியா அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியது? எந்த அரசு பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது? இதற்கு மோடி பதில் சொல்வாரா? உண்மை என்னவென்றால், மசூத் அசாரை காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவில்லை. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான் அனுப்பி வைத்தது. பாஜக-தான் பயங்கரவாதிகளுடன் இணங்கிப் போனது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.