புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன். புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் இருந்து 5 முறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார்.
உடல் நலக்குறைவால், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவரது உடலுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.