tamilnadu

கடன் சுமை: உடல் உறுப்பை விற்க அனுமதி கேட்டு மனு

புதுச்சேரி, ஆக. 22- கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து கடன் சுமைக்கு ஆளானதால் உடல் உறுப்பை விற்க அனுமதிக்க வேண்டும் என்று   முத்துபிள்ளைப்பாளையம் 2ஆவது குறுக்கு தெருவை சேர்ந்த எம்.தமிழ்ச்செல்வன் (37) புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.  அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:  கடந்த 2015ஆம் ஆண்டு  முதல் புதுச்சேரி அரசின் சாலைபோக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக நான் பணியாற்றி வருகிறேன். 2018ஆம் ஆண்டு முதல் நிர்வாகம் எனக்கு மாத ஊதியத்தை முறையாக வழங்கவில்லை. மேலும் தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 6 மாதங்களாக நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை. வீட்டு வாடகை மற்றும் குடும்பச் செலவினங்களுக்கு தேவையான பணத்தை கடனாக வட்டிக்கு  வாங்கியிருந்தேன். தற்போது கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன். எனவே, எனது உடல் உறுப்புகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். எனவே உடல் உறுப்பை விற்க தாங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்து. இதே போன்ற மனுவை முதல்வருக்கும் தமிழ்செல்வன் அனுப்பியுள்ளார்.