புதுச்சேரி, ஏப். 11- கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் பலியானார். புதுச்சேரி பிரதேசம் மாஹே பகுதியை சேர்ந்த இருதய நோயாளியான முதியவர் ஒருவர் ஏப்ரல் 1ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டு கேரளா மாநிலம் தலச்சேரியில் உள்ள டெலி மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்காக அவரது ரத்தம்,சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அன்றே அவர் மாஹே பகுதி கண்ணூர் அரசு மருத்துவ னைக்கு மாற்றப்பட்டார்.
கொரோனா தொற்று சிகிச்சைக்கான தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதியவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி (ஏப்.11) காலை 7.30 மணிக்கு முதியவர் உயிரிழந்ததாகப் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி பிரதேசத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 7 ஆம் பேரில் மாஹே முதியவர் முதல் பலியாகியுள்ளார். ஏற்கனவே 65 வயது மாஹே பகுதி மூதாட்டி கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் முதியவர் முதல் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 10 லட்சம்
கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தாள் அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.