tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : புதுவை தியாகிகள் தினம்...

புதுச்சேரியில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்குச் சென்று சூரியன் மறைவுக்குப் பின் தான் வீடு திரும்ப முடியும். அன்றாடம் 14மணிநேரம் உழைக்க வேண்டியிருந்தது. அடிமட்டக் கூலி, கடுமையான அடக்கு முறைகள் இருந்தன. இவ்வாறுஅடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் இலக்கான தொழிலாளர்கள் மத்தியில் இளைஞர் வ.சுப்பையா செயல்பட்டு வந்தார்.

தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க தோழர் அமீர் ஹைதர் கான் புறப்பட்டார். அப்போதுசென்னையில் தலைமறைவாக இருந்த தோழர் அமீர்ஹைதர் கானுக்குப் புதுச்சேரியில் கட்சியை உருவாக்கஇளைஞர் சுப்பையாவின் அறிமுகம் கிடைத்தது. சுரண்டலுக்குஎதிராக கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல்படி தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர்.1936 ஜூலை 30ஆம் தேதி சவானா மில் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும்உரிமைக்காக உள்ளிருப்புப் போராட்டம் துவங்கினார்கள். கடும்கோபம் கொண்ட பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பீரங்கி, துப்பாக்கிகளோடு இராணுவத்தால் ஆலையைச் சுற்றி வளைத்தது. ரோடு ரோலர் கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்த ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர். பலர் கையில் கிடைத்ததைக் கொண்டு ராணுவத்தை எதிர்கொண்டனர். அன்றைய துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை கால் உடல் உறுப்புகளை இழந்தனர். புதுச்சேரியில் பிரதான சாலை ரத்தம் தோய்ந்தது.

புதுச்சேரியில் ராணுவம் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக உலக நாடுகள் பலவும் கண்டனம் செய்தன.பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவான கண்டனக்குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா ஜவகர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்ஸ் சென்றார். இந்தப் பின்னணியில் எட்டு மணி நேர வேலை உரிமை சட்டமாக்கப்பட்டது. தெற்கு ஆசிய கண்டத்தில் புதுச்சேரியில்தான் முதன்முதலில் எட்டு மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது. இது மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.ஆனால் இப்படிப் போராடிப் பெற்ற எட்டு மணிநேர வேலை உரிமை தற்போது பறிபோய்க் கொண்டிருக்கிறது. 12 மணிநேர வேலை நேரம் கட்டாயமாக்கப்படுகிறது. இதை எதிர்த்த சமரசமற்ற போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.

- பெரணமல்லூர் சேகரன்

;