tamilnadu

சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி மருந்து தட்டுப்பாட்டை போக்க அதிகாரி உறுதி!

புதுச்சேரி, நவ.13- புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து தட்டுப் பாட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுகாதாரத்துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த அழுத்த மாத்திரைகள் மற்றும் உயிர்க் கொல்லி நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் தினசரி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மருந்து மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். மருந்து மாத்திரைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பழைய மகப்பேறு மருத்துவமனையில் இயங்கக்கூடிய சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேசச் செயலாளர் ஆர். ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரபுராஜ், பிரதேசக் குழு உறுப்பினர்கள் சரவணன், ஆனந்த், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பொன்னுரங்கம், மணவாளன், ஜோதிபாசு, உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை பிறகு, கட்சித் தலைவர்களுடன் மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் நடத்திய பேச்சுவார்த்தையில், இரண்டு தினங்களுக்குள் அனைத்து சுகாதார நிலையங்களிலும் மருந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.