tamilnadu

img

பட்டியலின மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை சிபிஎம் ஏற்படுத்தும்

மதுரை, ஜூன் 30- பட்டியலின மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை ஏற்படுத்துவதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்யும் என்றார் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை. மேலவளவு தியாகிகளின் 26-ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேலவளவு தியாகிகள் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, “பட்டியலின மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை ஏற்படுத்துவதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்யும். இன்றைக்கும் தீண்டாமைக் கொடுமை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழக அரசு இதற்கெதிராக நடவடிக்கை எடுத்து வரும் தருணத்திலும் சாதி ஆதிக்க மனோபாவமுள்ளவர்கள் புதிய புதிய வடிவங்களில் தீண்டாமையை அரங்கேற்றுகிறார்கள். அவர்கள் பட்டியலின மக்களுக்கு சவால் விடுக்கவில்லை. அரசிற்கு சவால் விடுவிக்கவில்லை. மாறாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே சவால் விடுக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராகலாம், பிரதமர் ஆகலாம், முதல்வர் ஆகலாம். ஆனால், அவர்கள் கோவிலுக்கு பூசாரியாக முடியாது. கோவில் திருவிழாக்களில் பங்கேற்கமுடியாது என்ற நிலை தொடர்கிறது.

இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பட்டியலின  மக்களைத் திரட்டி அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் உரிமையைப் பெற்றுக் கொடுத்துவருகிறது. தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டி களப் போராட்டங்களை நடத்தி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டும் ஒரே இயக்கம் செங்கொடி இயக்கம் தான். 2022-2023 நிதியாண்டில் சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் கீழ் 16,442 கோடி ரூபாய், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் 1,589 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2022-2023-ஆம் ஆண்டின் மொத்த ஒதுக்கீடான 4,281 கோடி ரூபாய் நிதியில் கல்விசார்ந்த திட்டங்களுக்கான 3571 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலவளவு  தலித் மக்கள் சுடுகாட்டுப்பாதை வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலவளவு தியாகிகளின் 26-ஆவது நினைவுதினத்தன்று கூட கொல்லப்பட்ட முருகேசனின் உறவினர் அர்ஜூணன் சுடுகாட்டுப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள் என என்னிடம் கேட்டுக்கொண்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை தீர்ப்பதற்கு தாமும் ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளேன்.

நாடு பெரிதா...? மதம் பெரிதா...? என சட்டமேதை அம்பேத்கர் அன்றே கேள்வியெழுப்பினார். நாடு என்பதை ஒருவர் மறந்தால் அவர் மதத்தின் பின்னால் செல்வார். மதம் மனு தர்மத்தையும், சனாதனத்தையும் தான் விதைக்கும். இன்றைக்கு சாதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த மதவாதக்கூட்டம் புறப்பட்டுள்ளது. மத ரீதியாக மக்களைப் பிளவு படுத்த  ‘சாதியம்’ என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள். மதவாதிகளுக்கு   கார்ப்பரேட்டுகளும் துணைபோகின்றனர். தீண்டாமைக்கொடுமைகளை முறியடிக்க அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும். சாதியற்ற சமூகம் படைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றார். முன்னதாக தியாகிகள் நினைவிடத்தில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், மேலவளவு கிளைச் செயலாளர் விஸ்வநாதன் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்கமிட்டி செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ.ஆஞ்சி, செயலாளர் செ.முத்துராணி, பொருளாளர் மகாலிங்கம், தீக்கதிர் மு.சங்கரநயினார், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.