புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் 10 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 2 ஆண்கள், ஒரு பெண்ணின் மனித கழிவு என்பது டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. சந்தேகத்திற்குரிய 11 பேரில் 3 பேர் மட்டுமே மரபணு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து மாதிரிகளை வழங்கினர்; மற்ற 8 பேர் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மேலும் 10 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.