புதுக்கோட்டை, ஆக.28- புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) சிறப்புப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா, தையல் தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, பொருளாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் ப.செல்வராஜ், ஆர்.கிருஷ்ணதேவி, என்.கவிமலர், எம்.முத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமிழக அரசும் சமூக நலத்துறையும் கூட்டுறவுத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளுக்கு சால் அளவு அடிப்பதற்கு ரூ.5.85 வழங்கும் நிலையில், மாணவிகளுக்கான கோட்டு தைப்பதற்கு ரூ.5 கொடுப்பதாக கூறப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் கிடைப்பது போல ரூ.150 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.