புதுக்கோட்டை, மே.19- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமியின் சாவில் மர்மம் உள்ளதால் நீதி விசாரணை நடத்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் வி;த்யா(13). இவர் திங்கள்கிழமை காலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் அங்கு தேடிச் சென்றனர். அங்கு சிறுமியைக் காணாததால் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தேடியுள்ளனர். அங்குள்ள தைலமரக் காட்டுப்பகுதியில் சிறுமி உடலில் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விசாரணை நடத்தினார். கூட்டுப் பாலியல் வன்முறைக்கு சிறுமி உட்படுத்தப்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்; இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை நள்ளிரவு ஒருமணியளவில் உயிரிழந்தார்.
சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்த பிறகே உடலை வாங்குவோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெ.கண்ணன், கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் இளையராஜா மற்றும் பி.வீராச்சாமி, செந்தில் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
நீதி விசாரணை வேண்டும்
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள சூழலில் இத்தகைய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். சிறுமி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். எனவே, விசாரணையை முறையாக நடத்தி குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், இந்த நொடியூர் கிராமத்தில் உள்ளவர்களுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படாததால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.