tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்திடுக! மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 30-குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதுக் கோட்டை ஆட்சியரிடம் மனு கொடுக் கும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைசந்தித்து வருகின்றனர். பெரும்பகுதியான மக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீரைப் பெறுவதற்கே தினந் தோறும் அதிகப்படியான நேரத்தை செலவிட வேண்டிய அவலநிலையில் உள்ளனர். இதனை பயன்படுத்தி சிலதனியார் நிறுவனங்கள் தண்ணீர் விற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.எனவே, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் தண்ணீர் விற்பனையில் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும். காவரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை புதுக்கோட்டை நகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாவட்டம்முழுவதும் பழுதடைந்து குடிநீர் விநியோகத்திற்கு தடையாக இருக்கும் மேல்நிலை மற்றும் சிறுமின்விசை நீர்த்தேக்கத் தொட்டி மின் மோட்டார்களை சரிசெய்து குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுசிலா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச்செயலாளர் டி.சலோமி உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் தே.காயத்ரி, ஜெ.தனலெட்சுமி, கே.நாடியம்மை, ஜெயந்தி, சுபாஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அண்ணாசிலை அருகே பேரணி நிறைவடைந்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

;