அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட சுமார் 20 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல்வைத்து உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் சுமார் 20 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர். இதையடுத்து கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிரியாணி கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.