tamilnadu

img

சிபிஎம் முதுபெரும் தலைவர் தோழர் ப.சண்முகம் காலமானார்

புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் ப.சண்முகம் (81) சனிக்கிழமை காலமானார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைப்பாளி மக்களுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் ப.சண்முகம். ஓன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியெழுப்பிய தலைவர்களில் மிக முக்கியமானவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நகரச் செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட மக்கள் பணியாற்றியவர். 

சிஐடியு தொழிற்சங்கத்தில் மாவட்டத் தலைவர், மாநிலக்குழு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும், உள்ளாட்சிதுறை தொழிற்சங்கத்தில் மாநிலப் பொறுப்பிலும், கிராமப் பஞ்சாயத்து தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். குறிப்பாக துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர் தோழர் சண்முகம். புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள தினக்கூலிகளாக பணியாற்றிய ஏராளமான துப்புரவுப்பணியாளர்கள் நிரந்தத் தொழிலாளர் களாகவும், கவுரவமான ஊதியம் கிடைக்கவும் தோழர் ப.சண்முகம் தலைமையேற்று நடத்திய போராட்டங்களே காரணம்.

மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப் பட்ட பல்வேறு குழுக்களிலும், புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினராகவும், புதுக்கோட்டை நகர வங்கி இயக்குனராகவும் பணியாற்றி ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுத்தந்தவர். அவருக்கு சில தினங்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த தோழர் ப.சண்முகம் சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி காலமானார். 

அஞ்சலி
ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எஸ்.சங்கர், ஏ.ராமையன்,எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், வி.துரைச்சந்திரன், சி.சுப்பிரமணியன், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தினர். சிஐடியு மாநிலக்குழு சார்பில் மாநில செயலாளர் சி.ஜெயபால், ஊரகவளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி ஆகியோரும் தோழர் ப.சண்முகம் உடலுக்குமலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

முன்னாள் அமைச்சர் திருமயம் தொகுதி எம்எல்ஏ ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் த.சந்திரசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் க.மதியழகன், நெசவாளர் அணிஎம்.எம்.பாலு, பொதுக்குழு உறுப்பினர் இராம.செல்வராஜ், காங்கிரஸ் கட்சிமாநில செயலாளர் சந்திரசேகரன், சிபிஐமாவட்ட செயலாளர் மு.மாதவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விடுதலைக்குமரன், காங்கிரஸ்நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு, புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் சங்கம் சார்பில் சேவியர், உணவ உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் சண்முகபழனியப்பன், தொமுச மின்வாரிய தொழிற்சங்க மாநில அமைப்புச் செயலாளர் சேவியர்பாபு, திமுக கலை இலக்கிய அணி எம்.சுந்தரம் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
தோழர் ப.சண்முகம் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்மநாபன், உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், ஏ.லாசர், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், விதொச அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம், சிபிஎம்மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், கே.காமராஜ், மூசா,எஸ்.ஸ்ரீதர், டி.ரவீந்திரன், கே.சாமு வேல்ராஜ், என். பாண்டி, தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி.நீலமேகம், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா உள்ளிட்டோர் இரங்கல் செய்தி அனுப்பி உள்ளனர்.

மாவட்டக்குழு இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியாற்றிய தோழர் ப.சண்முகம், கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்புச் செயலாளர் என சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை வகித்தவர். கட்சியின் மாநிலக் குழுவிலும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர்கால் பதிக்காத இடமே இல்லை என்கிறஅளவுக்கு மாவட்ட மக்களோடு இரண்டறக் கலந்து நின்றவர். அனைத்துக் கட்சிதலைவர்களாலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறம்படப் பணி யாற்றியவர்.கடைசி வரை குடிசை வீட்டில் எளிமையாக வாழ்ந்த தோழர் ப.சண்முகத்தின் மறைவு புதுக்கோட்டை மாவட்ட கட்சிக்கும், உழைப்பாளி மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.இறுதி நிகழ்ச்சியையொட்டி, எஸ்.கவிவர்மன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

மாநில செயற்குழு அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ப.சண்முகம் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக  தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தோழர்  சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக கட்சிப் பணியாற்றியவர்.தொழிற்சங்கத்தில் மாவட்டத் தலைவர், கட்சியின் நகரச் செயலாளர், மாவட்டக்குழு உறுப்பினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் மாவட்ட கட்சிக்கு தலைமை வகித்தவர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்கான எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று வெற்றி கண்டவர். உழைப்பாளி மக்களின் நலன்களைப் பாதுகாக்க மாவட்டம் முழுவதும் சென்று பணியாற்றியவர். புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். உழைப்பாளி மக்களுக்காக தன்னலமற்ற முறையில் பாடுபடுபட்ட தோழர் சண்முகம் தனது கடைசி மூச்சு வரை குடிசையில்தான் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட உழைப்பாளி மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் புதுக்கோட்டை தோழர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலிருந்து

;