tamilnadu

விபத்து, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, அக்.21- விபத்து, மாசு இல்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாட வோண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி அறிவுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உச்ச நீதிமன்றம் தீபாவளி பண்டிகையன்று இரவு 8 முதல் இரவு 10 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தது. இரண்டு மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக இரண்டு மணி நேரம் கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 2 மணி நேரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளது. அடிப்படையில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிப்பதற்கு முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வெண்டும் எனத் தெரிவித்துள்ளார்.