tamilnadu

img

பீகார்: வெப்பம் மற்றும் அனல் காற்று பாதிப்பில் சிக்கி 184 பேர் பலி

பீகாரில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 184 பேர் பலியாகி உள்ளனர். 
 பீகாரில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வருகிறது. அவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய மாவட்டங்களில் கடும் அனல்காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி கடந்த இரண்டு நாட்களில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.  வெப்பத்தால் மயங்கிய பலர் வழியிலேயே இறந்துவிட, மேலும் பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் பலி எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். 100க்கும் மேற்பட்டவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  திறந்த வெளி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்று கயா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசுப்பள்ளிகளுக்கு ஜூன்22வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 முதல் மாலை 4 மணி வரை அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.