tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 13

கவிக்குயில் சரோஜினி

அந்தச் சிறுமி கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயற்சி செய்தாலும் விடை சரியாகவே வரவில்லை. வெறுப்பாக வந்தது!

சட்டென்று தனது கணக்கு புத்தகத்தை மூடி வைத்தாள். ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்தாள். தனக்கு தோன்றிய எண்ணங்களை எல்லாம் கவிதை வடிவில் எழுதத் தொடங்கினாள். என்ன அதிசயம்! அழகான ஆங்கிலக் கவிதை ஒன்றை அவள் எழுதியிருந்தாள். “என்னம்மா? கணக்குப் போட்டு விட்டாயா?'' என்று கேட்டபடியே அப்பா அங்கு வந்தார். சிறுமி பதில் ஒன்றும் கூறவில்லை. அவளது நோட்டு புத்தகத்தை கையில் எடுத்து பார்த்த தந்தை ஆச்சரியம் அடைந்தார்! தன் மகளின் கவிதை எழுதும் ஆற்றலைக் கண்டு பெருமிதம் கொண்டார்! தந்தை திட்டுவார் என்று நினைத்த சிறுமிக்குக் குழப்பம் ஏற்பட்டது. ""உனக்குக் கணக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் கூறியிருக்கலாமே?'' என்றார் தந்தை. ""இனிமேல் உனக்குத் தோன்றும் கவிதைகளை இந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி வா!'' என்று ஒரு புதிய நோட்டுப் புத்தகத்தை அவளிடம் கொடுத்தார்.

அன்றிலிருந்து அச்சிறுமி தொடர்ந்து எழுதிக்கொண்டே வந்தாள் . அவளது கவிதைகள் மிக எளிய சொற்களைக் கொண்டும் அதே நேரத்தில் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டும் விளங்கின. இதனால் அவரது கவிதைகள் உலக மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. மக்கள் அவரை, "இந்தியாவின் கவிக்குயில்' என்று அன்போடு அழைத்தார்கள். அவர்தான் சரோஜினி நாயுடு ஆவார். “ஏரியின் பெண்” “காலமெனும் பறவை” “முறிந்த சிறகுகள்” ஆகிய தலைப்புகளில் இந்தக் கவிக்குயிலின் கவிதைகள் தொகுக்கப்பட்டன. இவற்றுள் “காலம் எனும் பறவை” மற்றும் “முறிந்த சிறகுகள்” ஆகிய இரண்டும் மிகப் புகழ்வாய்ந்த வாய்ந்தவை ஆகும். 1916 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகளை இவர் சந்திக்க நேர்ந்தது. காந்தியடிகளின் கொள்கைகளால் இவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தாமாகவே முன்வந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1931ஆம் ஆண்டு இங்கிலாந்தில் "வட்டமேசை மாநாடு' நடைபெற்றது. அதில் காந்திஜி கலந்து கொண்டார். அவருடன் சென்ற சரோஜினி பல்வேறு கருத்துக்களை ஆங்கில அரசாங்கத்திடம் முன்வைத்தார். 1942 ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடைபெற்றது. அதில் பங்குகொண்ட சரோஜினி ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். 21 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் பல துன்பங்களை அனுபவித்தார். இருந்தபோதிலும் பெண்களின் உரிமைகளை வேண்டும் பல கவிதைகளை ஆங்கிலத்திலும் வங்க மொழியிலும் எழுதினார். இந்திய விடுதலைக்குப்பின் இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.