tamilnadu

img

நாமக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை மகன், மகள் உயிருக்கு போராட்டம்

நாமக்கல், ஆக. 21- நாமக்கல்லில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகள் மற்றும் மகன் உயிருக்கு போராடி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம், கைலாசம்பாளையம், கருங்கல்காடு பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணி. தறித் தொழிலாளி. இவரது மனைவி மேனகா. இத்தம்பதியருக்கு  பூஜாஸ்ரீ (14), நவீன் (12) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கோபி, அய்யா சாமி, வைரவேல் என்பவர்களிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தறித்தொழில் சரியாக இல்லாததாலும், கூலிவேலை கிடைக்காததாலும் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்துள்ளனர். இதன்  காரணமாக கடனை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ள னர். இதனால், அய்யாசாமி, வைரவேல், கோபி ஆகி யோர் கடனைத் திருப்பித் தரக்கோரி தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளியன்று தனது குழந்தை களுக்கு அரளி விதையை அரைத்துக் கொடுத்து, தாங்களும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில், சுப்பிரமணியம் மற்றும் மேனகா வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் பூஜா, நவீன்  ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள கந்துவட்டி கும்பலை சேர்ந்த கோபி, அய்யாசாமி, வைரவேல் ஆகியோரை தேடி வருகின்றனர். 

தொடரும் கந்து வட்டி மரணங்கள்- சிபிஎம் கண்டனம்

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி கூறியதாவது, கந்துவட்டிக் கொடுமையால் உயிரை  மாய்த்துக் கொண்ட குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். தற்கொலைக்கு காரண மான கந்துவட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2010ஆம் ஆண்டு பள்ளிபாளையத்தில் கடன் தவணை தராத பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அதனை தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வேலுசாமியை கந்து வட்டி கும்பல் வெட்டி படுகொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.  கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி கொடுமையால் இன்னும் எத்தனை குடும்பங்கள் சீரழியும் என தெரிய வில்லை. இத்தகைய செயலைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய குடும்பங்களை கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து காக்க வேண்டும். கொரானா காலத்தில் கடன்கள் பெற்ற தொழிலாளர்களிடம் கடன் தவணையை பெறுவதற்கு ஊரடங்கு  காலம் முடியும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும். பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்க அரசு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும். கந்து வட்டி கொடுமையில் ஈடுபடும் நபர்கள் மீது எழும் புகார்களுக்கு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் கடன் பெற்ற தொழிலாளர்களின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.