பேசும் காச்சக்காரம்மன் – 11
இன்று எதற்கெடுத்தாலும் உடம்பு அசதியா, தூக்கமில்லையா, உடம்பு வலியா, தலைவலியா, மூட்டுவலியா ஒரு பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு தூங்கிவிடும் ஒரு பெரும் சமூகமாக நாம் வளர்ந்து நிற்கிறோம். இன்று உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பயன்படுத்துகிற ஒரு மருந்தாக, மருந்து வணிகத்தின் ஒரு மந்திரக்கோலாக பாராசிட்டமால் மாத்திரைகள் இன்று கொடி பிடித்து வளர்ந்திருக்கின்றன. தொழிற்புரட்சியின் விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் நேரம் காலம் பாராமல், பகலிரவு பாராமல் வேலை பார்க்கும் காரணத்தால் அத்தகைய உழைப்பாளிகளுக்கு உண்டாகின்ற உடல் நோவிற்கும், மன அயர்ச்சிக்கும் ஏதாவதொரு எளிய தீர்வு கிடைத்துவிடாதா என்று ஏங்கிப் போய் கிடக்கிறார்கள். ஆனால் அதற்காக மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு மது அருந்துதலை ஒரு தீர்வாக அரசாங்கம் முன்னெடுத்திருப்பதை நினைத்து நாமெல்லாம் ரொம்பவும் பெருமைப்பட வேண்டும்.
சிறுகுழந்தை முதல் பெரு வயதானவர் வரையிலான பெரும்பான்மையான மக்களுக்கு அன்றாடம் ஏற்படுகிற காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அதிக செலவு பிடிக்காத, வருகிற நோயை உடனடியாக தீர்க்கிற, பயன்படுத்துகிற மருந்தினால் அதிக பக்கவிளைவில்லாத மருத்துவத்தை காலங்காலமாக மக்கள் தேடியலைந்தபடியே இருக்கிறார்கள். அதனால்தான் மக்களால் எந்தவொரு எளிய மருத்துவத்தையும் மாற்றுக் கருத்தின்றி எதுனாலும் சரி, எங்களுக்குச் சரியானால் போதும் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது. கரிசல் தாத்தா கி.ராவின் கதை சொல்லி இதழில் வெளியான நாட்டுப்புற கதையில் ஒரு உயர்தர குலத்துப் பெண் ஒருவர் பன்றிக்கறி விற்கும் கடையின் முன்பு வந்து மூலக்கடுப்புக்காக பன்றியின் பச்சை இரத்தத்தை வாங்கிப் போவதைப் பற்றி எழுதியிருப்பார். இன்றைய காலகட்டத்தில் யாரையாவது மூலத்திற்கு பன்றியின் பச்சை இரத்தத்தை குடிக்கச் சொன்னால் அது முடியுமா? ஆக, நவீன மருத்துவத்தின் தேவையும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகிவிட்டது.
ஆனாலும் மாற்று மருத்துவத்தில் நிலவேம்பு கசாயம், துளிசி டீ போன்றவைகளை வீட்டளவிலேயே தயாரித்து பயன்படுத்திக் கொள்கிற வசதி வாய்ப்பைப் போல அல்லோபதியிலும் வீட்டளவிலேயே மாத்திரையைப் போட்டு சரிசெய்து கொள்ள முடியாதா, இதற்கு மருத்துவமனைக்கு வேறு போய் டாக்டரைப் பார்க்க வேண்டுமா? என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது அதுதான் பிரச்சனை. தாவரங்களை மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்திய ஓர் சமூகம் இன்று ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டதால் நோய்க்கு வீட்டளவில் என்ன செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு எதற்காகச் செல்ல வேண்டும் என்பதையே மறந்துவிட்டது. காலங்காலமாக இயற்கையோடு வாழ்ந்த மக்களெல்லாம் அவர்கள் வாழ்விடங்களைச் சுற்றியிருக்கிற மருத்துவ குணமிக்க மரம், செடி, கொடிகளின் வேர்கள், தண்டு, கிழங்கு, இலை, பட்டை, பூ, காய், கனி, விதைகளை எப்போது, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்கிற அனுபவ மருத்துவ அறிவைப் பெற்றிருந்தார்கள். இந்த இயற்கை அறிவிலிருந்துதான், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழங்குடிகளிடமிருந்துதான் இன்றைய நவீன மருத்துவ உலகமே விரிந்தது. அது 17ஆம் நூற்றாண்டில் உலகமெங்கும் மலேரியா காய்ச்சல் பரவி பல மக்களைக் கொன்றுக் குவித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது மலேரியாவிற்கு மருந்தெல்லாம் கண்டறியப்படாத காலம். தற்செயலாக சின்கோன் (ஸ்பெயின்) பகுதியின் அரசுப் பிரதிநிதியான டான் லூயியின் மனைவி தென் அமெரிக்காவின் இன்கா பழங்குடி மக்கள் வாழுகிற பகுதிக்கு ஒரு விசயமாக பரிதாபத்திற்குரிய காய்ச்சலோடு வந்திருந்தார். அப்போது ஏதும் சூதுவாது அறிந்திராத அம்மக்களோ, காய்ச்சல் ஏதும் வந்தால் எப்போதும் தம் இன மக்களுக்குத் தருகிற ஒரு மரத்தின் பட்டையிலிருந்து எடுத்த கசாயத்தை கொடுக்கவே அந்த சீமாட்டிக்கு காய்ச்சல் எல்லாம் சரியாய் போய்விட்டது. அதுதான் மலேரியாவைக் குணப்படுத்தியதாக பதியப்பட்ட முதல் செய்தி. இந்த செய்தி காட்டுத்தீ போல போர்புரிய வந்தவர்கள், வியாபாரம் பார்க்க வந்தவர்கள் வழியே பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது.
ஆனால் இந்த மலேரியா காய்ச்சலுக்கென்று பாரம்பரிய அறிவை பன்னெடுங் காலமாக கையில் வைத்திருந்த இன்கா மக்களைப் பற்றி யாரும் வெளியே மூச்.. காட்டவில்லை. அம்மக்கள் பயன்படுத்திய அம்மரத்தின் பெயரும் தெரியவில்லை. அதற்குப் பதிலாக அந்த கண்டுபிடிப்பின் புகழோ மருந்து வணிகர்களுக்குப் போய்விட்டது. சின்கோன் பகுதியிலிருந்து நோய்வாய்ப்பட்டு வந்த அப்பெண்மணியின் ஊர்ப் பெயரே அம்மருத்துவகுணம் மிக்க மரத்திற்கு சின்கோனா என்று காதுகுத்தி பெயர் சூட்டப்பட்டுவிட்டது. அம்மரமும், அப்பாரம்பரிய மருத்துவ அறிவும் இப்படியாக பழங்குடிகளிலிருந்து ஒருவழியாக திருடப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் காய்ச்சல் என்று வந்தால் இந்த சின்கோனா பட்டைகளையும் நம்மவர்கள் வில்வ இலைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆரியர்களெல்லாம் வருவதற்கு முன்பாக இங்கு வாழ்ந்த தொல்குடிகள் கோவில்காடுகள் வழியே மருத்துவகுணம் மிக்க மரங்கள் மற்றும் செடிகளை கடவுளாக பாவித்து வேம்பம் மரங்களுக்கு பட்டுச்சேலை உடுத்தி, பனைமரத்திற்கு வெள்ளை வேஷ்டி கட்டி இப்படியாக வழிபட்டு வந்தனர். பின்னர் மன்னராட்சி காலத்தில் அம்மன்னர் அந்தப்புறத்தில் நீடூழி வாழவும், கொடி தூக்கிப் போகிற போர்களிலெல்லாம் வெற்றிவாகை சூடவும் யாகம் நடத்த வேண்டி மரத்திற்காக பெருங் காட்டோடு இந்த கோவில் காடுகளையும் அழித்தார்கள். ஏனென்றால் நம் தொல்குடி மக்களின் தெய்வங்களெல்லாம் சிறுதெய்வங்கள்தானே என்று நினைப்பு அவர்களுக்கு, நம் குலதெய்வங்கள் உட்பட.
ஆனாலும் நம் மக்களின் தொன்மையான மரவழிபாட்டின் பண்பாட்டுக் கூறுகளை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டுபோய் அவர்களின் பெரு தெய்வக் கோவில்களில் நந்தவனங்களாக உருவாக்கினார்கள். அங்கு நாம் ஏற்கனவே காடுகளில் வைத்து வழிபட்ட மூலிகை குணமிக்க வில்வமரம், அரசமரங்களையெல்லாம் கொண்டுவந்து செயற்கை காடுகளை உருவாக்கினர். உடம்பு சரியில்லையென்றாலே பேய், பிசாசு பிடித்திருக்கிறது என்று பதறிய காலம் ஒன்று உண்டு. பேய் பிசாசு என்றால் அதற்கு கடவுளிடம்தானே போய் பார்ப்பார்கள். பூசாரியும்கூட, “அதெல்லாம் ஒன்னுமில்லே தாயீ, எல்லாம் சாமி அருளால சரியாகிப்பூடும்” என்று அருள்வாக்கு சொன்னதோடு இந்த வில்வஇலைகள், வேப்பம் பூக்கள், துளசிகள் இட்ட தீர்த்தங்களை குடிக்கச் சொல்லி அதன் இலைகளையும் வாயில் போட்டு மென்று சாப்பிடச் சொல்லுவார். இதை இன்றும்கூட பல கோவில்களில் காண முடியும். இனி வரும் காலங்களில் நிலவேம்பு கசாயம்கூட கோவில் தீர்த்தமாக வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் காய்ச்சல் அறிகுறிகளும் சரியாகிவிடும் அல்லவா. இதுபோன்ற மதம் சார்பில்லாத நம் பண்பாட்டை ஒருபுறம் நவீன ஆன்மீகம் உள்நாட்டிலேயே கொள்ளையடிக்க, மறுபக்கம் நம்மை படையெடுத்து வந்த ஐரோப்பியர்கள் இந்த மருத்துவ குணமிக்க பண்பாட்டை அவர்கள் நாட்டிற்கு கொள்ளையடித்துச் செல்ல ஆரம்பித்தனர். பொருளை கொள்ளையடித்தலைவிட அறிவை கொள்ளையடிப்பதுதான் பெரும் இழப்பு என்று தெரிந்துதானே யாழ்ப்பாண நூலகம், நாளந்தா பல்கலைக்கழகம் என இடித்து தரைமட்டமாக்கினார்கள். தொடர்ச்சி அடுத்த வாரம்
-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com