tamilnadu

கோட்சேக்களே!   மீண்டும் மீண்டும் சுடாதீர்!


மனிதர்களுள்   மகானாகிப்  போனார்- மக்கள்
மனதிலெலாம் சிற்பமாக ஆனார்;
ஜனவரியாம் முப்பதன்று கோட்சே- காந்தி
சுடர்நெஞ்சில் சுட்டான்மத வெறியால்…
பாரதத்தின் தந்தையாகி வந்தார்- இங்கு
பாழிருளை ஓட்டியொளி தந்தார்;
பாருக்கொரு அகிம்சைவழி  சொன்னார்- அதைப்
போற்றிடுவோம்; ஒற்றுமையைக்  காப்போம்!
அடிமைஎனும்    விலங்குதனை  உடைத்தார்- இங்கு
அன்னியனின் ஆதிக்கத்தை முறித்தார்;
கொடியர்முன்பும் அன்புமொழி பகர்ந்தார்- அந்தக்
கருணைதனை நெஞ்சினிலே ஏற்போம்!
அகிம்சையெனும் ‘தீப்பந்தம்’ படைத்தார்-அதில்
அதிகார ஆணவத்தை எரித்தார்…
அகிலத்தின் தியாகஜோதி  யானார்- அவர்
அன்புதீபம் ஏற்றிடுவோம்  இன்று…
பலமதங்கள், பலமொழிகள்  நாடு- இது
பாசமக்கள் ஒற்றுமையின் வீடு!
சிலகொடியர் மதவெறியில்  இன்று- இதைச்
சிதைத்திடவே அனுமதியோம் என்றும்!
‘குடியுரிமைத் திருத்தச்சட்டம்’ மற்றும்- நாட்டில்
கொடுமைகளைச்  செய்கின்றார் முற்றும்…
காந்திதேச இறையாண்மை மார்பில்- கொடிய
கோட்சேக்களே,  மீண்டும் மீண்டும்   சுடாதீர்!
ந.காவியன்
 

;