பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு குறித்த முடிவுகள் தற்சமயம் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் தேர்விலிருந்து மட்டுமல்லாது, அரசின் அறிவிப்பிலிருந்து விடுபட்ட தனித் தேர்வர்களின் நிலை இன்னும் ஓய்ந்த பாடில்லை. 10 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனாவிலிருந்தும், தேர்வுத் தளங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட போதும் காலாண்டு, அரையாண்டு எழுதத் தவறிய தனித் தேர்வர்களும், ஏற்கனவே நடைபெற்ற தேர்வில் வெற்றியடைய முடியாமல் மீண்டும் தேர்வெழுதக் காத்திருந்தவர்களும் காக்கப்படவில்லை. அதுவும், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 10 ஆயிரத்து 742 தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ளதாக தேர்வு இயக்குநரகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர கடந்த தேர்வில் தவறிய 23 ஆயிரத்து 581 பேர் பதிவு செய் திருந்தனர். இச்சூழலில், பொத்தம் பொதுவாக அனைவருக்கும் தேர்வு ரத்து என அரசு அறிவித்துள்ளது. காலாண்டு, அரையாண்டின் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வே எழுதாத தனித் தேர்வர்களை குழப்பத்திலும், நிச்சயமற்ற சூழலிலும் தள்ளியுள்ளது.
யாரிந்த தனித்தேர்வர்கள்..
சாதாரணமாக தினசரி பள்ளிக்குச் சென்று தேர்வெழுதும் மாணவர் கூட காலாண்டு அரையாண்டுத் தேர்வில், தேர்வினை எழுதுவதற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டு தான் முழுத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வர். ஆனால், தனித்தேர்வர்களின் நிலையோ அவ்வாறு இல்லை. தனித் தேர்வர்களைப் பொறுத்தவரை பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பார்வை, அவர்கள் சரியாகப் படிக்காத காரணத்தினால் பள்ளிகளால் புறக்கணிக்கப் பட்டு தனியாக தேர்வு எழுத காத்திருப்பவர்கள் என்று நினைப்பது. இப்பார்வை அனைவருக்கும் இல்லாமல் இருப்பினும், தான் ஒரு தனித்தேர்வர் என மாணவன் ஒருவன் தன்னை அறிமுகம் செய்யும்போது பெரும்பாலும் இந்த எண்ணமே பெரும்பாலானோர் மனதில் முதலில் எழும். ஆனால், உண்மையில் அவர்கள் ஏன் தனித் தேர்வர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தை அறிய பெரிதாக யாரும் முற்படுவதில்லை. குடும்பச்சூழலின் காரணமாக படிக்கும் வயதிலேயே வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்பட்டவர்கள், நல்ல வேலையில் இருந்தும் கூட பதவி உயர்வு பெறுவதற்காக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுது பவர்களும் இதில் அடங்கு வர். இம்மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இம்முறையில் தேர்வெழுது பவர்கள் ஏராள மானோர் உள்ள னர். இவர்கள் பொதுவாக மற்ற மாணவர்கள் எழுதுவது போல் காலாண்டு, அரையாண்டுத் தேர்வினை எழுதிவிட்டு பின் முழு ஆண்டுத் தேர்வினை எழுதுபவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும், வருகைப்பதிவு என்பதெல்லாம் இம்மாணவர்களுக்கு கிடையாது. அரசின் தற்போதைய தேர்வு முடிவுகளுக்கான மாற்று அறிவிப்புகள் இவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டாலும் மேற்கண்ட காரணங்கள் அவற்றை சாத்தியமாக்கப் போவதில்லை. ஆனால் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இவர்களுக்கான எந்தவொரு அறிவிப்பையும் அரசு தற்போது வரை வெளியிடவில்லை என்பதே. பள்ளிக்கு நாள்தோறும் வந்து செல்லும் மாணவர்களே பல படிப்பினைகளைப் புரிந்து கொண்டு தேர்வெழுதுவதில் பல சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில், எந்தவித பயிற்சியும் இன்றி தேர்வை நேரடியாக எதிர்கொள்ளும் தனித்தேர்வர்கள் குறித்து அரசு வாய் திறக்காமல் இருப்பது பாரபட்சமாக அவர்களைப் புறந்தள்ளுவதே அன்றி வேறல்ல.
புதிய கல்விமுறை
பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை இவ்வருடம் (2019-2020) புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ப்ளூ பிரிண்ட் எனப்படும் எப்பகுதியிலிருந்து எந்தெந்த கேள்விகள் கேட்கப்படும் என்பதற்கான வரையறை அட்டவணை அளிப்பதும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்தான கேள்விக்கு, இந்த அட்டவணையானது தேர்வுத் தாள்களை தயாரிப்பவர்களுக்குத் தான் தேவையே தவிர, தேர்வெழுதுபவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவசியமில்லை என கல்வித்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆக, பாடத்திட்டமும், தேர்வு முறைகளும், தேர்வுக்குத் தயாராகும் நடைமுறையும்கூட புதிதாகியிருக்கின்ற வேளையில் தினமும் பள்ளிக்குச் செல்கின்றவர்களுக்கே இது சிரமத்தை உண்டாக்கியிருந்தது. இச்சூழலில், பள்ளிக்கு வராமல் தேர்வெழுதும் தனித் தேர்வர்களுக்கும், முன் தேர்வில் தோல்வியடைந்து தற்போது தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுவது சவாலான ஒன்றாகவே கருதப்படும்.
எங்களை புறந்தள்ளுவதா?
“நான் 6 வருடத்திற்கு முன்பாகவே முடிக்க வேண்டிய தேர்வு தான், தவிர்க்க முடியாத சில காரணங்களால் எழுத முடியாமல் போனதால் கடந்த வருடம் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தேன். தற்போது எலக்டிரீசியன் வேலைக்குச் சென்று கொண்டிருப்பதால் தேர்வுக்காக பயில்வதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதில் சிரமம் உள்ளது. இருப்பினும் மேல்படிப்பிற்காக பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக காத்திருக்கிறோம். ஆனால், அரசு தேர்வுகள் குறித்தோ, முடிவுகள் குறித்தோ எங்களுக்கென தனியாக அறிவிக்காததால் தொழிலிலும் முழு கவனத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். நான் முன்வைக்கும் கோரிக்கை, எங்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கொரோனா தொற்று வந்தாலும் சரி, நாங்கள் தேர்வெழுத ஒரு நாளை நிர்ணயித்து அரசு கூற வேண்டும்.“ என்கிறார் தேர்விற்காக காத்திருக்கும் ஒரு தனித்தேர்வர்.
“வீட்டில் என்னோடு சேர்த்து 3 பெண் குழந்தைகள். இரண்டாவது மகளாகிய நான் கடந்த வருடம் 10வது முடிக்க வேண்டியது. ஆனால் ஒரு பாடத்தில் தவறியதால் அட்டெம்ப்ட் எழுத வேண்டியிருந்தது. கடந்த வருடத்திலிருந்து தேர்விற்காக நாங்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது எங்களை மட்டும் புறந்தள்ளி அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது எங்களை மேலும் வேதனைக்குள்ளாக்குகிறது. இதுகுறித்து அரசு நிச்சயம் கலந்தாலோசித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும்” இது மற்றொரு மாணவியின் குரல்.
அனைத்தும் சமமாம், தேர்வு முடிவு மட்டும் தனியாம்
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், தமிழக முதல்வர் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடும்போது தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கிறார். தேர்வு என ஒன்று நடந்திருந்தால் அனைத்து மாணவர்களும் பாரபட்சமின்றி தேர்வு எழுதியிருப்பார்கள். ஆக அனைவரும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, அரசு தேர்வுகள் ரத்து என அறிவிப்பு வெளியிடுகிறதென்றால் அது அனைவருக்கும் பொருந்துவதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், முடிவு அவ்வாறானதாக இல்லை. தனித்தேர்வர்களைப் பொருத்தவரை மற்ற பள்ளி மாணவர்கள் பயிலும் அதே பாடநூலைப் பயில்பவர்கள். அவர்கள் எழுதும் அதே தேர்வு இடங்களில் தான் இத்தனித் தேர்வர்களுக்கான தேர்வு இடமும் ஒதுக்கப்பட்டிருக்கும். விடைத்தாள் மதிப்பீடும் இருவகை மாணவர்களுக்கும் ஒரே போல் தான் திருத்தப்பட்டிருக்கும். இவ்வாறு எல்லா வகையிலும் சரிசமமாக தினசரி பள்ளி மாணவர்களோடு போட்டியிடும் தனித்தேர்வர்களை தேர்வு முடிவுகள் குறித்து அறிவிக்கையில் மட்டும் புறக்கணிப்பது என்பது நியாயமற்ற ஒன்றாகும். இத்தனித்தேர்வர்களில் அனைவரும் வயதைக் கடந்தவர்கள் அல்ல, பல காரணங்களுக்காக மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் முன் தேர்வுகளில் தோல்வியைத் தழுவி தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பித்தவர்கள் என பலர் அடங்குவர். ஆக இவர்களுக்கான போட்டி ஒன்றாக இருக்கையில் தேர்வுமுடிவுகளும் ஒன்றாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிறார்.
ச.காவியா.