மன்னார்குடி, மார்ச் 5 - இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டலம் சார்பில் பிரதம மந்திரியின் உழவர் உயர்வு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் முகாம் மேலச்சாலை கிளையில் நடைபெற்றது. இந்தியன் வங்கியின் சென்னை தலைமை அலுவலக ஊரக வங்கித்துறை மற்றும் அனைவருக்கும் வங்கி சேவை திட்டம் துறையின் பொதுமேலாளர் எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 39 பயனாளி விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சுனாமிக்கு பின் வாழ்வாதாரம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.44 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
விழாவில் எம்.நாகராஜன் பேசியபோது பிரதமர் உழவர் உயர்வு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6000/- பெறும் பயனாளி விவசாயிகளுக்கு இந்தியன் வங்கி பயிர்க்கடன், கால்நடைவளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறை செலவுகள் என குறுகிய கால பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பிரதமரின் சுரக்சா பீமா விபத்து காப்பீடு திட்டம், ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் அடல் பென்சனர் திட்டம் ஆகியவை மூலம் விவசாயிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பயன்பெறலாம் என்று பேசினார். சமீபத்தில் இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ள எளிய சேமிப்ப மற்றும் கூட்டுக் கடன் திட்டத்தில் சுய உதவிக்குழுவினர், சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று பேசினார். இவ்விழாவில் இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டல மேலாளர் நை.ராஜாமணி, மேலச்சாலை கிளை மேலாளர் ராம்குமார், கூரைநாடு கிளை மேலாளர் தேவி, தரங்கம்பாடி கிளை மேலாளர் முத்துக்குமார், கொள்ளிடம் கிளை மேலாளர் விஜய்பாபு நல்லூரி, தென்பாதி கிளை மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்டு வங்கி அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள், சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக வங்கியின் துணை மண்டல மேலாளர் மு.செல்வநாயம் வரவேற்க, சீர்காழி கிளை மேலாளர் வேலு ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.