tamilnadu

img

பயிர் இழப்பீடு கோரி ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட 2 ஆயிரம் விவசாயிகள்

இராமநாதபுரம்

இராமநாதபுரம்,மார்ச் 11- இராமநாதபுரம் மாவட்டத்தில் 2018 - 19 ஆம் ஆண்டில் பயிர் இன்சூரன்ஸ் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் தலைமை வகித்தார். போராட்டத்திற்குப் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் சங்க மாநிலப்பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டத்தலைவர் எம்.முத்துராமு, மாவட்டச் செயலாளர் வி.மயில்வாகணன் மற்றும் நிர்வாகிகள் பி.கல்யாணசுந்தரம், தோட்டாமங்கலம் ராசு, முருகேசன் ஆகியோர் பேசினர்.

2016-17, 2017- 2018 ஆம் ஆண்டில் இழப்பீடு வாங்காத விவசாயிகள் பட்டியல்படி உரியவர்கள் தக்க வங்கி ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ளலாம். 2018 - 19 இல் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏப்ரல் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஏக்கருக்கு மேல் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மார்ச் இறுதிக்குள் வழங்க  விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் சங்க தலைவர்களிடம் உறுதியளித்தார். மேலும் மாவட்ட விவசாய அதிகாரி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  விவசாயிகளிடம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் இழப்பீடு தொடர்பான நடவடிக்கை உறுதியளிப்பு தெரிவிக்கப்பட்டது.  போராட்டத்தில் சங்கத்தின் தாலுகா நிர்வாகிகள் டி.நவநீதகிருஷ்ணன், எஸ். முருகேசன், செந்தில், ராமலிங்கம், எம்.சுப்பிரமணியன், பெரியசாமி கே.கணேசன், ஜெயபால், பொன்னுச்சாமி, கருத்திருமன் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.