tamilnadu

விவசாயிகளே... பட்ட துயரம் எண்ணிப் பாரீர்!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2340 என்று சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த நிலையில், பாஜக அரசு அதனை வெறுமனே ரூ.1750 என்று அறிவித்தது. மாநில அரசுகள் விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கு மறுத்த நிலையில் வெறும் ரூ.800? 900-க்கு நெல்லை விற்க வேண்டிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்பட்டதுதான் உண்மையில் நடந்தேறியது.


விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்றிருக்கின்றன. உங்களுடைய போராட்டங்கள் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களை அசைத்துப் பார்த்திருக்கின்றன. உங்களுடைய போராட்டங்கள் கிராமப்புற இந்தியாவின் பிரச்சனைகளை தேசிய அரசியலில் முன்னுக்கு கொண்டு வந்திருக்கின்றன.

நீங்கள் நடத்திய இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களுடனேயே நின்றிருக்கின்றது. விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் மற்றும் கடன் தள்ளுபடிக்கான உத்தரவாதம் ஆகியவற்றை அளிக்கின்ற வகையில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற உங்களுடைய பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே தனிநபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கின்றனர்.

ஆனால் மோடி அரசு துரோகத்தையும் வஞ்சகத்தையும் மட்டுமே விவசாயிகளுக்குப் பரிசளித்தது.

2014 நாடாளுமன்றத் தேர்தல்களின் போது நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளைச் சற்றே பாருங்கள்

விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

சுவாமிநாதன் கமிசனின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

பயிர் இழப்பிற்கு ஈடாக முழு காப்பீடு உறுதி செய்யப்படும்.

ஆனால் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த பிறகு இந்த ஐந்தாண்டுகளில் நடந்திருப்பதென்ன?



விவசாயிகள் தற்கொலை தடுப்பு என்ற மோடியின் வாய்ச்சவடால் பொய்யாகிப் போனது

பாஜக ஆட்சியின் முதல் ஆண்டிலேயே விவசாயிகளின் தற்கொலைகள் 42 சதவிகிதம் உயர்ந்து விட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகளில் மட்டுமே 48,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தற்கொலை செய்து கொள்கின்ற விவசாயிகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்தியது மட்டுமே, இந்த தற்கொலைகள் குறித்து பாஜக அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கை மூலமாக இந்த அரசாங்கம் உண்மைகளை மறைத்தது மட்டுமல்லாமல், இறந்து போன விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் தர மறுத்திருக்கிறது.  



குறைந்தபட்ச ஆதார விலை - பாஜக ஆட்சியின் செப்படி வித்தை

சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவதில் பாஜக ஆட்சி செய்திருக்கும் செப்படி வித்தைகளும், துரோகங்களும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதாக இருக்கவில்லை. மொத்த பயிர் உற்பத்திக்கான செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு ஒன்றரை மடங்காக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டால், அது சந்தையைப் பாதித்து விடும் என்று கடந்த 2015 பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தை மோடி அரசாங்கம் பதிவு செய்தது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் விவசாய வர்த்தகத்திற்கு சிவப்பு கம்பளமும், விவசாயிகளுக்கு பட்டை நாமமும் போடுகின்ற பாஜக அரசின் கார்ப்பரேட் விசுவாசம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.



கடன் வலையில் விவசாயிகள்  

விவசாய இடுபொருட்களின் கடுமையான விலை உயர்வு, பற்றாக்குறை வருமானம் ஆகியவை நில உரிமை வைத்திருக்கும் விவசாயிகளில் 86 சதவீதம், குத்தகை விவசாயிகளில் 80 சதவீதம் பேரை கடன் வலைக்குள் சிக்க வைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தால், அது வெறும் ‘லாலிபாப்’ போன்றுதான் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு மோடி செல்கிறார். ஆனால் அதே லாலிபாப்களை அம்பானி, அதானி போன்ற பாஜகவிற்கு மிக நெருக்கமான பெருமுதலாளிகளுக்குத் தருவதில் எவ்விதத் தயக்கமும் இல்லாதவராகவே அவர் இருந்து வருகிறார். கோடிக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைக்காத கடன் தள்ளுபடி, விரல் விட்டு எண்ணக் கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் மிக எளிதாக இந்த பாஜக ஆட்சியில் கிடைத்தது. இத்தகைய பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய 15 லட்சம் கோடி ரூபாய் பணம், வராக் கடனாக மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது. இவர்களோடு வங்கிகளில் கடன் வாங்கி, அதனைச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி,மெகுல் சோக்சி போன்றவர்களும் இருக்கின்றனர்.



பயிர்க் காப்பீடு: பலனடைந்தது ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே!

பாஜக அரசு கொண்டு வந்த பசல் பீமா யோசனா திட்டம் விவசாயிகளுக்கான திட்டமாக இருக்கவில்லை. மகாராஷ்ட்ராவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில், 2.8 லட்சம் ஹெக்டேரில் சோயா பயிர் விளைவித்திருந்த விவசாயிகளிடமிருந்து 19 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து 154 கோடி ரூபாய் என்று மொத்தமாக காப்பீட்டுத் தொகையாக 173 கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீட்டுத் தொகையாகத் திருப்பி அளித்தது. இதன் மூலம், எந்தவொரு முதலீடும் செய்யாமலேயே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 130 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.  


கால்நடையும் உனக்கு இல்லை

கால்நடைகளை விற்பவர்களும், வாங்குபவர்களும், அவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களும் பசுக் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பயனற்று ஓய்ந்து போன கால்நடைகளைப் ‘பாதுகாப்பதற்கான’ செலவுகள் கூடுதலாக விவசாயிகளின் தலையில் ஏற்றப்பட்டன.

பால் மற்றும் பால் பண்ணை சார்ந்த பொருட்களை இந்திய சந்தைக்குள் தாராளமாக இறக்குமதி செய்து கொள்ள அனுமதித்து, உள்ளூரில் தயாராகும் பொருட்களை வீணடித்ததன் மூலம் பால் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கடன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது.  



நூறு நாள் வேலையாவது உருப்படியாக கிடைத்ததா?

வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், கிராமப்புறத்தில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கு பெருமளவில் உதவி வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு அளித்து வருகின்ற நிதியைக் குறைத்ததன் மூலம் அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கப்பட்டு இருக்கிறது. 2010-11ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.51 சதவீதம் என்று நிதி ஒதுக்கப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு 2017-18ஆம் நிதியாண்டில் 0.38 சதவீதமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய தொகையை விட அதிகமாகச் செலவழித்த 19 மாநில அரசுகள் தங்களுடைய வருவாயிலிருந்து 3972 கோடி ரூபாயை இழந்திருக்கின்றன.

இந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ ஒன்பது கோடிப் பேர் வேலை தேடி வந்த போது, ஏழரைக் கோடிப் பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரைக் கோடிப் பேர் வேலை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பட்டிருக்கின்றனர். மோடி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்பாக 2013-14 நிதியாண்டில் இந்த திட்டத்தின் கீழ் கட்டாயம் வேலை அளிக்கப்பட வேண்டிய 100 நாட்கள் வேலையைப் பெற்ற குடும்பங்கள் 40 லட்சம் என்றிருந்த நிலை மாறி, 2017-18 நிதியாண்டில் அது 30 லட்சம் குடும்பங்களாக குறைந்து போய் விட்டது. வேலை பார்த்தவர்களுக்கு கூலி தராமல் காலம் தாழ்த்துவது, 15 நாட்களுக்கு மேல் காலம் தாழ்த்தி ஊதியம் வழங்கும் போது தரப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தர மறுப்பது, ஊதிய உயர்வை அளிக்காமல் இருப்பது போன்று இந்த அரசின் முடிவுகள் அனைத்தும் கிராமப்புறத்தில் இருப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றும் வேலையை மட்டுமே செய்து வருகின்றன.



ஆதிவாசிகளையாவது விட்டுவைத்தார்களா?

நிலம் கையகப்படுத்துவதில் பாஜக அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கைகள் ஆதிவாசிகளின் வன உரிமைகள் வரை நீண்டிருக்கின்றது. கடந்த ஐந்தாண்டுகளில் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகம் சுரங்க சட்டம், ஈடு செய்யும் காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல அறிவிக்கைகள் மூலமாக பல சட்டங்களையும் திருத்தி உள்ளது. இதுவரையிலும் வன உரிமைச் சட்டத்தின் மூலமாக ஆதிவாசிகளுக்குத் தரப்பட்டு வந்திருக்கின்ற உரிமைகளை இந்த பாஜக அரசு நீர்த்துப் போகச் செய்திருக்கின்றது. பாஜக ஆட்சியில் ஆதிவாசிகளுக்கான வன உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆதிவாசிகள் தங்கியிருக்கின்ற நிலங்கள் பறிக்கப்பட்டு, பெரும் நிறுவனங்களிடம் சுரங்கத் தொழில்களை நடத்துவதற்காக நிலங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. ஏறத்தாழ 23.30 லட்சம் ஆதிவாசி குடும்பங்கள் மற்றும் பாரம்பரியமாக காடுகளில் வாழ்ந்து வந்த குடும்பங்கள் காடுகளில் இருந்து துரத்தப்பட்டுள்ளதாக, 2018 டிசம்பரில் கிடைத்திருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆதிவாசிகளின் உரிமைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு நின்று, ஆதிவாசிகளுக்கு துரோகம் இழைத்ததன் விளைவாக உச்சநீதிமன்றம் காடுகளில் இருந்து ஆதிவாசிகளை வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இருந்தாலும் 2019 ஜூலை வரையிலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், தீர்ப்பு வருகின்ற வரையிலும் லட்சக்கணக்கான ஆதிவாசி மக்களின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது.  



கிராமப்புற இந்தியாவின் மீதான துல்லியத் தாக்குதல்

புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணத்தை செல்லாது என்று அறிவித்த போது, கிராமப்புறப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப் போனது. மோடியால் அரங்கேற்றப்பட்ட இந்த முட்டாள்தனமான செயல் விவசாயிகளின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த அறிவிப்பிற்கு முந்தைய இரண்டாண்டுகளில் ஏற்பட்டிருந்த மிகப் பெரிய வறட்சியில் இருந்து விவசாயிகள் மீண்டு வந்து, தங்களுடைய விளைபொருட்களைச் சந்தைக்கு கொண்டு வரவிருந்த வேளையில் மோடியின் இந்த அறிவிப்பு விவசாயிகளை சொல்லொண்ணாத் துயரில் ஆழ்த்தியது.


கூட்டுறவு வங்கிகளில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய பணத்தாள்களை மாற்றிக் கொள்ள முடியாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் போன போது விவசாயம் நொடித்துப் போனது.

விதைகளோ, உரங்களோ வாங்க முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பணப் பற்றாக்குறையால், அன்றாடம் விற்கப்பட வேண்டிய காய் கனிகள் வாங்குவாரற்று அழுகிப் போயின. பணமதிப்பு நீக்க அறிவிப்பு கிராமப்புறப் பொருளாதாரத்தை முற்றிலும் அடியோடு அழித்து விட்டது.


எனவே, விவசாயிக்கு அழிவை மட்டுமே தந்த மோடியின் பாஜகவிற்கும், அதன் கூட்டாளிகளுக்கும் எந்தவொரு விவசாயியும் தங்களுடைய வாக்குகளைச் செலுத்தக் கூடாது. எந்தவொரு கிராமப்புறத் தொழிலாளியும் இவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அனுபவங்களின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களிடம் கேட்டுக் கொள்கிறது.

உங்களுடைய உரிமைகளையும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளையும் பாதுகாக்கின்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா

ளர்களைக் களத்தில் நிறுத்தியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும், இடதுசாரி வேட்பாளர்களுக்கும் உங்களுடைய வாக்குகளை அளிக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

சிபிஎம் மத்தியக்குழு வெளியிட்டுள்ள அறைகூவலிலிருந்து 


தமிழில்: பேரா.தா.சந்திரகுரு

;