tamilnadu

img

குடியுரிமை சட்டத்திருத்தம் : பாஜகவின் பொய் பிரச்சாரம் எதிர்கொள்வது எவ்வாறு? -பாகம் 1

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கருத்தரங்கங்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், நடைமுறைக்கு கொண்டு வந்து விட்ட  சட்டத்திற்கு  ஆதரவாக பாஜகவும் தொடர்ந்து களத்தில் நிற்கிறது.  களமிறங்கி இருப்பது மட்டுமல்லாது, கலவரங்களையும் திட்டமிட்டு அந்தக் கட்சி நடத்தி வருகிறது. மக்களுக்கெதிரான அரசின் நடவடிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகளில் அரசின் தோல்விகள் ஆகியவற்றிலிருந்து திசை திருப்புவதற்காக, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வைக்க அந்தக் கட்சி திட்டமிட்டிருக்கிறது. ஆதரவற்று நிற்கின்ற முஸ்லீம் சமுதாயத்தை எதிரிகளாகத் தொடர்ந்து கட்டமைப்பதன் மூலம், இல்லாத ஆபத்தை இருப்பதாக உருப்பெருக்கி காண்பித்து பெரும்பான்மை மக்களிடம் பேரச்சத்தை விதைத்து ஆதாயம் தேடிக் கொள்வதற்கே இவர்கள் முனைந்து செயல்படுகிறார்கள். சட்டத்திருத்தத்திற்கான தங்களுடைய ஆதரவு பிரச்சாரங்களை நடத்துகிறோம் என்ற பெயரில், முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரத்தையே இவர்கள் வலுவாக மேற்கொண்டு வருகிறார்கள்.  

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய முடியாது என்ற சர்ச்சையில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்த பாஜக பெண்கள் அமைப்பினர், ’எங்களுக்கு அந்த  உரிமை வேண்டாம்’ என்ற புதுமையான கோரிக்கையை முன்வைத்தனர். ’உரிமை வேண்டாம்’ என்பது இவர்கள் அரசிடம் வைத்த கோரிக்கை புதுமையாக இருந்தது. உரிமை வேண்டாம் என்று சொல்வதை, உரிமை தரக்கூடாது என்பதன் வேறு வடிவமாகத்தானே இவர்கள் முன்வைக்கிறார்கள். தங்களுடைய பெரும்பான்மையை மட்டுமே துணையாகக் கொண்டு, இன்றைக்கு நடைமுறைக்கு கொண்டு வந்து விட்ட சட்டத்திற்கு ஆதரவாக நடைபெறுகின்ற இவர்களுடைய போராட்டங்களும், பிரச்சாரங்களும் அது போன்றே இருக்கின்றன. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 88662 88662 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்வது. அந்த குறிப்பிட்ட எண்ணில் மட்டும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக அமித்ஷாவால் பெருமையடித்துக் கொள்ள முடிவது போன்றவையெல்லாம் அரசின் நடைமுறையாகத் தெரியவில்லை.  

இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இருப்பதாக அரசாங்கத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில், இந்த சட்டம் குறித்து பல்வேறு வகைகளிலும் மக்களிடம் விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுகிறது. வேடிக்கைதான்! மக்களுடைய ஆதரவின்றி கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு ஆதரவு தேடுகின்ற ஆட்சியதிகாரம் குறித்தும், அது குறித்து பிரச்சாரம் மேற்கொள்ள சொல்லித் துணை நிற்கின்ற நீதிமன்றங்கள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் 2014ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே, முஸ்லீம்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசமும்  அச்சுறுத்தப்படுவதான உணர்வுடனே இருந்து வருகிறார்கள். ஆனாலும் தாங்கள் அச்சுறுத்தப்படவில்லை என்று சொல்பவர்கள் தாங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதை  அறியாமல் இருப்பதற்காக தேசபக்தி, மதம் போன்ற மாயைகளுக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. இந்த மாயைகளில் சிக்கிக் கொள்ளாதவர்களிடம்கூட, பாஜக மீதான அச்ச உணர்வாக அல்லாமல், இந்த நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது என்ற அச்ச உணர்வே மேலோங்கி இருக்கிறது. அனைவர் மீதும்  உளவியல்ரீதியான தாக்குதல் இந்த அரசாங்கத்தால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆறாண்டுகளுக்கு முன்னர் இருந்த இந்தியா, இன்றைய நிலைமையில் இருப்பதாகத் தோன்றவில்லை. இன்னும் நான்கு ஆண்டுகளில் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சமும் சேர்ந்து கொள்கிறது.

முஸ்லீம்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பதாக, அவர்கள் மட்டுமே அச்சத்தில் உறைந்து போயிருப்பதாகக் கூறுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் 2019 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முஸ்லீம்களிடம் பிரமிக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதனை அச்சம் என்று பார்ப்பவர்கள் நிச்சயம் ஏமாறப் போகிறார்கள். முஸ்லீம்கள் உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான் என்றாலும், அவர்களுடைய எதிர்வினை இன்று இருப்பதைப் போன்று ஒருமித்து சரியான திசையில் கடந்த காலங்களில் கொண்டு செல்லப்படவில்லை. சென்ற பாஜக ஆட்சிக் காலத்தில், விரக்தியில் மூழ்கிய முஸ்லீம்கள் தனிதனிக் குழுக்களாக தங்களுடைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஆட்சியாளர்களால் மிகவும் தந்திரமாக ஏற்படுத்தப்பட்டது. வன்முறை கலந்த தீவிரவாதம் குறைந்து போயிருக்கும் இன்றைய நிலையில், பாதிக்கப்படுபவர்கள் யாராயினும் புதிய பாதையில் பயணம் செல்லத் தலைப்பட்டுள்ளனர் என்பதே இன்றைய உலக நியதியாக இருக்கின்றது. பெண்களின் தலைமையில் முஸ்லீம்கள் இன்றைய ஆட்சியை எதிர்த்து, தங்களுக்கான நியாயத்தைப் பெறத் தலைப்பட்டுள்ளனர்.  முத்தலாக், காஷ்மீர், அயோத்தி  பிரச்சனைகளில் மௌனம் காக்க   வேண்டிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முஸ்லீம்கள் குடியுரிமை குறித்த பிரச்சனையில் சீறி எழுந்துள்ளனர். குடியுரிமையே அனைத்து உரிமைகளுக்குமான அடிப்படை உரிமை என்பதால், இனியும் வாளாவிருப்பது சரியில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர்.

குடியுரிமை சட்டத்திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்காது என்று அவர்களை முழுமையாக ஒடுக்க நினைக்கும் இவர்களே உத்தரவாதம் தருவது வேடிக்கையாகவே உள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், ஜமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு பாதிப்பிற்குள்ளாகி இருந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மோடி ’காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிகமாக சப்தம் எழுப்புகின்றனர். சூறாவளியைக் கிளப்புகின்றனர். அது போதாது என்று நினைக்கும் போது, தீயிட்டுக் கொளுத்துகின்றனர்.  தீ வைப்பவர்கள் யார்? தொலைக்காட்சியில் பாருங்கள். யார் இவர்கள்? அவர்களுடைய ஆடைகளிலிருந்தே நாம் அவர்களை யாரென்று கண்டு கொள்ளலாம்’ என்று தனது வன்மம் முழுவதையும் கொட்டித் தீர்த்திருந்தார். இது போன்ற பேச்சுக்களைப் பேசுவது மோடியின் வழக்கம் என்றாலும், இந்தியா முழுவதிலிருந்தும் ஒட்டுமொத்த எதிர்ப்பை உருவாக்கியதாக அந்த தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது. அது அராஜகத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தது. கேரளப் பெண்ணான இந்துலேகா ”என்னை யாரென்று அடையாளம் காண முடியுமா மோடி அவர்களே” என்று தன்னுடைய பதிவின் மூலம் மோடியிடம் கேட்ட கேள்வி மோடியின் அந்த அராஜகப் பேச்சைத் தோலுரித்துக் காட்டிய எளிமையான பதிலாக இருந்தது. 

image.png

அசாமில் கடந்த 2019 ஜனவரி 4 அன்று நடைபெற்ற பாஜக பேரணியில், தாங்கள் கொண்டு வரப் போகின்ற குடியுரிமை திருத்த மசோதா பற்றி குறிப்பிட்டுப் பேசிய மோடி ’பாரத மாதாவின் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால், நாம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டாமா? அவ்வாறு வருபவர்களின் பாஸ்போர்ட் நிறத்தை நாம் பார்க்க வேண்டாமா? அவர்களுடைய ரத்தத்தின் நிறம் பற்றி நமக்கு கவலை வேண்டாமா?’ என்று கேள்விகளை எழுப்பினார். ’உங்கள் பாஸ்போர்ட் எந்த நிறத்தில் இருந்தாலும், உங்களுடைய ரத்தத்தின் நிறத்தால் நீங்கள் என்னுடன் உறவு கொண்டவர்கள்’ என்று 2014ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்ட புதிதில் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் உரையாற்றிய போது அவர் சொன்ன வார்த்தைகள், இத்தகைய பேச்சுக்கள் புதிதல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. ஏதோ இப்போது 2019இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவர்கள் வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள் என்று கருதுவது எவ்வளவு மடத்தனம் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.  

பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் தலைவர்களாலும் ரத்தத்தையும், தேசத்தையும் இணைத்து பேசப்பட்டு வருகின்ற இத்தகைய பேச்சுகள், முஸ்லீம்கள் இந்தியாவுடன் ரத்த தொடர்பு உள்ளவர்கள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டும் வகையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இவர்களைப் பொறுத்தவரை, ஹிந்துக்கள் மட்டுமே இந்தியாவின் குழந்தைகள், முஸ்லீம்கள் அனைவரும் தத்துப் பிள்ளைகள் என்றே இவர்கள் கருதி வருகிறார்கள்.

மதச் சிறுபான்மை என்ற பெயரில் முஸ்லீம்களை கண்மூடித்தனமாகத் தாக்குவது, அதே நேரத்தில் கிறிஸ்துவர்களைக் கண்டு கொள்ளாதிருப்பது என்ற இவர்களின் தந்திரம், கிறிஸ்துவர்களைப் பாதுகாப்பதால் முஸ்லீம்களின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை மறைப்பதற்கும், உலகளாவி நிற்கின்ற கிறிஸ்துவ – முஸ்லீம் முரணுக்குள் தங்களின் முஸ்லீம் விரோதச் செயல்பாடுகளை எளிதாக மறைத்துக் கொள்வதற்குமே பயன்படுகின்றன. இருந்தலும் கிறிஸ்துவ பாதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஹிந்து பெரும்பான்மைவாதத்தை ஒற்றை ஹிந்து ராஷ்ட்ரம் நோக்கி கொஞ்சம் கொஞசமாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மதச் சிறுபான்மையினர்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி முஸ்லீம்களைத் தனிமைப்படுத்துகின்ற இவர்களின் நோக்கம், நிச்சயம் முஸ்லீம்களுக்கு எதிரான திட்டத்துடனே இருக்கும். இந்த நிலைமையில், முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று இவர்கள் சொல்வது ஒருபோதும் நம்பத் தகுந்ததாக இருக்கப் போவதில்லை.  

இவர்களுடைய இத்தகைய பேச்சுக்களைத் தவிர, முஸ்லீம்களை நாட்டை விட்டு துரத்த நினைக்கின்ற இவர்களுடைய நோக்கத்தை நிரூபிக்க வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்? இதோ அவர்களே ஆதாரங்களை அள்ளித் தருகிறார்கள். அண்மையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக இவர்கள் வெளியிட்டிருக்கும் ’குடியுரிமை சட்டத்திருத்தம் - 2019 முஸ்லீம்களுக்கு எதிரானதா’ என்ற தலைப்பிலான குறுநூலில் (பக்கம் 30-31), “குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் இக்கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள் அம்பலமானதாலும், தற்போது சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால் CAA எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பிரச்சாரத்தை திசை திருப்பி உள்ளனர் இவர்கள். இந்த நிலையில் NRC பற்றியும் மத்திய அரசு விளக்கம் அளித்து விட்டது. பாகிஸ்தான் பங்களாதேஷில் இருந்து வந்த இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை என்ற அவர்களது கோரிக்கை மீண்டும் இந்தியாவில் மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க மட்டுமே உதவும். இஸ்லாமியர்களுக்கு என ஒரு நாடு வந்த பிறகு, இந்தியா அவர்களுக்கு விஷேசமான முறையில் குடியுரிமை வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு திரட்டுகின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வருகின்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கிகின்றோம் என்று நாங்கள் சொல்லும் போது, எதிர்க்கட்சியினர் அந்த நாடுகளிலிருந்து வருகின்ற முஸ்லீம்களுக்கு குடியுரிமை கேட்கின்றார்கள் என்ரு இவர்கள் முன்வைக்கின்ற வாதத்தில், அங்கிருந்து வருகின்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்று சொல்கிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. மாறாக இவர்கள் முஸ்லீம்களுக்கு குடியுரிமை கேட்கிறர்கள் என்ற குற்றச்சாட்டுதான் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. முஸ்லீம் அல்லாதவர்கள், முஸ்லீம்கள் என்று மதரீதியான பாகுபாடு காட்டாமல், அரசியலமைப்புச் சட்டத்தை மீறாமல் அனைவருக்கும் குடியுரிமை தாருங்கள் என்பதுதானே எதிர்க்கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. அது எப்படி தவறாகும்? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டைத் திசைதிருப்பி அவர்கள் மீது தொடர்பில்லாத குற்ரத்தைச் சுமத்துவது எந்த வகையிலும் நியாயமற்றதாகும்.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நாட்டிலிருந்து வருகின்ற முஸ்லீம்களுக்கு நாங்கள் குடியுரிமை தர மாட்டோம் என்று இவர்கள் கூறுவதை, ஒரு வாதத்திற்காக  சரியென்று எடுத்துக் கொள்ளலாம் என்றால், அடுத்து இவர்களுடைய ஆதரவுப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படுகின்ற வாதத்தைக் கவனியுங்கள்.  ’இஸ்லாமியர்களுக்கென்று ஒரு நாடு வந்த பிறகு அவர்களுக்கு இந்தியாவில் விஷேசமான முறையில் குடியுரிமை வழங்க வேண்டிய அவசியம் இல்லை’ என்கிறார்கள்.  இந்த வாதம் அடுத்து என்ன சொல்லப் போகிறது என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

இந்த வாதத்திற்குள் இவர்கள் மறைத்து வைத்திருக்கின்ற அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வந்து பார்க்கலாம். அவர்களுடைய அந்த ’இஸ்லாமியர்களுக்கென்று ஒரு நாடு வந்த பிறகு அவர்களுக்கு இந்தியாவில் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்’ என்ற வாதம் ’இஸ்லாமியர்களுக்கென்று ஒரு நாடு வந்த பிறகு இங்கிருக்கின்ற முஸ்லீம்களுக்கு இந்தியாவில் ஏன் குடியுரிமை வழங்க வேண்டும்’ என்பதாகவே, இவர்களது வாதங்களும், செயல்பாடுகளும் இருந்து வருகின்றன. இதனைச் சொல்வதற்காகவே, குடியுரிமைச் சட்டம் என்ற ஒன்று நடைமுறைக்கு வந்து 65 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் வாழ்ந்து வரும் அனைத்து இந்தியர்களும் குடியுரிமைக்கான தகுதிச் சோதனைக்குள் இப்போது தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். தாங்கள் முடிக்க நினைத்திருப்பதைச் சாதிக்க முடியவில்லை எனில், இந்தியாவிற்குள்ளேயே சிறைகளுக்குள் முஸ்லீம்களை அடைத்து இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற இவர்களின் கொடூர சிந்தனையே, ’எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மீண்டும் இந்தியாவில் மற்றொரு பாகிஸ்தானை உருவாக்க மட்டுமே உதவும்’ என்ற இவர்களின்  வாதத்திற்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கிறது.  

image.png

தங்களுடைய கடந்த காலக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இவர்கள் நடத்துகின்ற இந்த நாடகத்தை பெரும்பாலான பொதுமக்கள் ரசிக்கவில்லை என்பதே உண்மை. இவர்களுடைய இத்தகைய வாதங்கள் குறித்து பொதுவான, மிகச் சாதாரணமான ஹிந்து மற்றும் முஸ்லீம் மக்களிடம் என்ன விதமான சிந்தனை நிலவுகிறது என்று கண்டறிவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டில் சிஎஸ்டிஎஸ் - என்இஎஸ் அமைப்புகள் இணைந்து 12196 பேரிடம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டவற்றை இங்கே இந்த இடத்தில் கூறுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ’ஆய்வில் பங்கெடுத்து பதிலளித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் (76 சதவீதத்தினர்) இந்தியா ஹிந்துக்களுக்கானது மட்டுமல்ல, அனைவருக்குமானது என்ற வாதத்தை ஆதரிக்கின்றனர்.

இயற்கையாகவே இந்தியா ஹிந்துக்களுக்கான தாயகம் என்ற ஹிந்துத்துவ பிரச்சாரத்தை கிட்டத்தட்ட 75 சதவீத ஹிந்துக்களே நிராகரித்துள்ளனர். மறுபுறத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உறுதிப்பாட்டை, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற வாக்குறுதியை 6 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே நம்ப மறுக்கிறார்கள் .ஊடகங்கள் மூலமாக பரப்பப்படுகின்ற ஹிந்துத்துவ கருத்துக்கள் மிகச் சாதாரண இந்திய குடிமக்களிடம் இருக்கின்ற அடிப்படை அரசியல் நம்பிக்கைகளைப்  பாதிக்காது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன’ என்று அந்த ஆய்வு முடிவுகள்  தெளிவுறுத்தி உள்ளன. ஹிந்துக்களில் 74 சதவீதத்தினரும், முஸ்லீம்களில் 87 சதவீதத்தினரும் இந்தியா ஹிந்துக்களுக்கு மட்டுமான நாடு அல்ல என்று கருதுகிறார்கள். இந்தியா அனைத்து மதத்தினருக்குமான மதச்சார்பற்ற நாடு என்பதில் ஹிந்துக்களை விட முஸ்லீம்கள் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறான மனநிலை மக்களிடையே இருப்பதை எடுத்துக் காட்டும் வகையிலேயே இன்று குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அனைவ்ரும் பங்கெடுத்துக் கொள்கின்ற போராட்டங்களாக இருக்கின்றன. 

முனைவர் தா.சந்திரகுரு