tamilnadu

img

உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி!

நேபாளத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கஜின் சாரா ஏரி, உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற சாதனைப் பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள இமயமலை பகுதியில் திலிச்சோ ஏரி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4919 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி 4 கிமீ நீளம், 1.2 கிமீ அகலம் மற்றும் சுமார் 200 மீட்டர் ஆழம் கொண்டது. இதுதான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்று கூறப்பட்டது.

ஆனால், அதே மனாங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மலையேற்ற குழுவினரால், கஜின் சாரா ஏரி கண்டறியப்பட்டது. சிங்கர்கர்கா பகுதியில் கண்டறியப்பட்ட இந்த ஏரியானது, கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 மீட்டர் உயரத்தில் உள்ளதாக அங்கு சென்ற குழு கணித்துள்ளது. இந்த ஏரி சுமார் 1.5 கிமீ நீளம், 600 மீட்டர் அகலம் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்படவில்லை.

இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 5000 மீட்டருக்கு மேல் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், இது உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற புதிய சாதனை பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.