tamilnadu

img

சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக சமரசமற்ற போராட்டம்...

சாதி ஒழிப்புக்காக பெரும் போராட்டங்களை நடத்திய மண் தமிழ்நாடு. அந்த பாரம்பரியத்தை பின் தொடர்ந்து சாதி ஆதிக்கத்துக்கு எதிராக சமரசமற்ற போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் என சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் தெரிவித்தார். 

சாதி வெறி கும்பலால் கொத்தி குதறப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் எம்.அசோக்கின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற முகமது ரியாஸ், அவருக்கு அஞ்சலி செலுத்திபேசியதாவது: மனிதனை மனிதனாக மதிக்காத சக்திகள் இந்த உலகத்தில் உள்ளன. இந்த பகுதியிலும் உள்ளது என்பதற்கான உதாரணமே அசோக்கின் படுகொலை. சாதி வெறி இந்த பகுதி மக்களின் அன்புக்குரிய புதல்வனை பலிகொண்டிருக்கிறது. சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடிய ஒரு அசோக் கொல்லப்பட்டாலும் ஆயிரம் ஆயிரமாய் டிஒய்எப்ஐ தோழர்கள் இந்த போராட்டத்தில் அணிவகுப்பார்கள். 

நேற்று (ஜுன் 13) இரவுடன் இங்கு நடந்த போராட்டம் முடிந்துவிடவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததால் அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த நாட்டில் உள்ள எஸ்சி எஸ்டி வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை முறைாக அமல்படுத்த வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களைபாதுகாக்க எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும் என கூறினார்.