tamilnadu

img

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் தலைமறைவு

திசையன்விளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவாகி உள்ளார்.  

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சக மாணவிகளிடம் கூறி உள்ளார். அவர்களும் தங்களிடம் தலைமையாசிரியர் பழக முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.  இதனிடையே மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி சாட் செய்துள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட  தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது  நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவிகளின் பெற்றோர் கூறினர்.  

இதையடுத்து தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே  தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் தலைமறைவாகி விட்டார்.

;