உதகை மாவட்டம் கூடலூரில் 9-ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய ரஜினேஷ் குட்டன் என்பவர் பைக்காரா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பைக்காரா அருகே உள்ள பகல்கோடுமந்து பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அங்கர்கோடு என்ற பகுதியில் உள்ள புதரில் உடலில் காயங்களுடன் மாணவி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார், மாணவியின் உடல் அருகே கார் ஒன்று இருந்ததை கண்டனர். அந்த கார் கக்கோடி மந்து என்ற பகுதியை சேர்ந்த ராஜினேஷ் (வயது 25) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் ஒரு கும்பல் காரில் மாணவியை சம்பவ இடத்திற்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதை அடுத்து, போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து தலைமறைவாக உள்ள ராஜினேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரஜினேஷ் குட்டன் என்பவர் இன்று பைக்காரா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.