tamilnadu

img

நீலகிரியில் மருத்துவமனைகள், பொதுசுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்திடுக சிபிஎம் வலியுறுத்தல்


உதகை.மே.6-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது : ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் 9 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் புதிதாக ஒரு சிலருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுபவர்களுக்கு நோய் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக சளி மற்றும் ரத்த மாதிரிகளை தற்போது நீலகிரியில் இருந்து கோவைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்யும் நிலையே உள்ளது. இதற்கு குறைந்தது 8 லிருந்து 10 மணிநேரம் வரை ஆகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை மையங்கள் செயல்படும் சூழலில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இதுவரையிலும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படாமல் இருப்பது மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.
கொரோனா நோய் அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க, அண்மையில் கூடலூரில் நகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனி பகுதியில் சுமார் 30 பேருக்கு ஒரு விதமான மர்ம நோய் ஏற்பட்டு அதில் ஒரு பெண்ணும் உயிரிழந்திருக்கிறார். அங்கு உள்ள நோயாளிகளில் பலரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் புற்றுநோய் மற்றும் காசநோய் நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகம். இத்தகைய நோயாளிகளும் ஏற்கனவே தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். மேலும் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அருகிலுள்ள கேரள மாநில மருத்துவமனைகளையே சிகிச்சைகளுக்காக நம்பியுள்ளனர். 
ஆகவே, நீலகிரி மாவட்டத்தின் நோய் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டமைப்பை ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகம், உதகையில் உள்ள தலைமை அரசு மருத்துவமனை, உதகையில் செயல்பட்டு வரும் தனியார் ஃபார்மசி கல்லூரி ஆகிய இடங்களில் உடனடியாக நோய் பரிசோதனை மையங்களை ஏற்படுத்திட வேண்டும். குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின்னரும் இதுவரை அரசாங்கத்தில் ஒப்புதல்  கிடைக்கப்பெறாததது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.
இதேபோல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட வேண்டும். பெரும்பாலும் மலைப்பாதைகள் மற்றும் எளிதான போக்குவரத்திற்கு இடையூறுகள் உள்ள தமது மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த வேண்டும். எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான வகையில் ஏற்கனவே பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மத்திய மாநில அரசுகளின் சிறப்பு அனுமதியை பெற்று மருத்துவ கல்லூரி துவங்குவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் குறித்த அச்சமும், நோய் பரவும் விகிதமும் அதிகரித்துள்ள இச்சூழலில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இத்தகைய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.