tamilnadu

img

கேரளத்திற்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

புதுதில்லி, மே 4- கொள்ளை நோய் கொரோனா தடுப்பை மனிதநேய அணுகுமுறையுடன் பயனுள்ள விதத்தில் கையாண்டதில் கேரளம் வகித்த பங்கை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிராகக் கேரளம் நடத்துகிற போராட்டம் விரிவான அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுப் பிரிவின் தலைவர் ஹுவாங் பின் க்வான் பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எல்லா இடதுசாரி முற்போக்குச் சக்திகளையும் ஒன்றிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலூக்கமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்வதை நாங்கள் கவனித்தோம். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்வதற்கும், உழைக்கும் வெகுஜனங்களின், வறுமையில் வாடுபவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் சிபிஎம் தொடர்ந்து பாடுபடுகிறது. இது உலகெங்கும் உள்ள அரசியல் கட்சிகளுக்குப் பெரும் ஊக்கமூட்டுவதாகும்.இதிலிருந்து நிறைய பாடங்களை உள்வாங்க வேண்டியுள்ளது என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களிடம் தங்கள் பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான யுத்தம் உள்பட பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து நிற்பதற்கான தயார் நிலையையும் அக்கறையையும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.